நெஞ்சம் மறப்பதில்லை 22- எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

- பெரு துளசிபழனிவேல்

ஏதோ ஒரு ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் எம்.என்.நம்பியாரும் மோதிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உருண்டு புரண்டு வாள் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி நடந்துக் கொண்டிருக்கின்ற சண்டையில் எம்.ஜி.ஆர் வாளை நம்பியார் தட்டிவிடுவார். எம்.ஜி.ஆர். நிராயுதபாணியாக ஆபத்தில் சிக்கிக் கொள்வார். அப்போது டெண்ட்டு கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் 'தலைவரே இந்தாங்க கத்தி... பிடித்துக் கொள்ளுங்கள்' என்று தன்னிடம் உள்ள கத்தியை, ஒடிக்கொண்டிருப்பது படம் என்றுகூட தெரியாமல் திரையின் மீது வீசி எறிந்தார். கத்திப்பட்டதும் இறுக்கமாககட்டப்பட்டிருந்த துணியால் ஆனதிரை கிழிந்துவிட்டது.

Nenjam Marappathillai 22

அதே போல் எம்.ஜி.ஆர் தேர்தலுக்காக ஒட்டுக் கேட்டு வரும்போது ஒரு வயதானபாட்டி கற்பூரம் ஏற்றிஆரத்தி எடுத்திருக்கிறார். அப்போது நீங்க அந்தப் பாவி நம்பியாரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க தம்பி என்றுச் சொல்லி நெற்றியில் பொட்டு வைத்தாராம்.

இந்த இரண்டுமே பின்னாளில் திரையில் காட்சிகளாகவும் வந்துவிட்டன.

இப்படித்தான் டைரக்டர் வி.சேகரின் 'நீங்களும் ஹீரோதான்' படத்தில் நடிப்பதற்காகநம்பியார் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிறார். இவரைப் பார்த்த வயதான ஊர்ப் பெண்கள், "ஐயோ இவனா... படங்களில் பல பெண்களைக் கற்பழித்தவனாச்சே...", என்று பயந்து ஒடியிருக்கிறார்கள்.

இப்படி பல படங்களில் வில்லனாக நடித்து படம் பார்த்தவர்களையே பயமுறுத்தி நிஜம் என்று நம்பும்படி தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்த்தவர்களுக்கெல்லாம் நிஜமாகவே எதிரி போல் தெரிந்தவர் எம்.என்.நம்பியார்.

Nenjam Marappathillai 22

எம்.ஜி.ஆர். படம் பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் இவர் விரோதியாகவே தெரிந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இவர் பரம விரோதியாகவே அறியப்பட்டார்.

அந்த அளவிற்கு இவரது வில்லன் நடிப்பு எம்.ஜி.ஆர். படங்களில் கொடூரமாகவே இருக்கும். இவர் நடித்த பலபடங்களில் குடிப்பார். பெண்களை துரத்தி துரத்திகற்பழிப்பார். ஹீரோவை அடிப்பார், குழந்தைகளை, முதியோர்களை துன்புறுத்துவது போல் நடிப்பார். இந்த நடிப்பைப் பார்த்துதான் கெட்டவர்களை பார்த்தால் 'நீ என்ன பெரிய நம்பியாராடா' என்று கேட்டபார்கள். அப்படிப்பட்ட வில்லன் வேடங்கள் அவருக்கு அமைந்தன.

நிஜ வாழ்க்கையில் தெய்வப்பக்தி கொண்டவராகவும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். சைவ உணவைத் தவிரஅசைவ உணவை அறவே வெறுத்து 60 வருடங்களாக சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொண்டவர்.

ஒரே மனைவியுடன் இறுதிவரை உண்மையான அன்புடன் வாழ்ந்த இவரை இறக்கும் வரை படங்களில் பார்த்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு அவரை நிஜமான வில்லனாக சிலர் பார்த்தார்கள். அதுதான் மிகவும் கொடுமை. அந்த அளவிற்கு சினிமாவை நேசித்தார். தான் ஏற்றுக் கொண்ட வேடங்களில் ஈடுபாடு காட்டி நடித்தவர் எம்.என். நம்பியார்.

Nenjam Marappathillai 22

இவரது கலைப் பயணம் நாடகத் துறையிலிருந்து தொடங்கியது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது. நவாப் ராஜமணிக்கம், ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாக்களிலும் 12 வருடங்களாக நாடக நடிகராக பணியாற்றியிருக்கிறார். சக்தி நாடகச் சபா தயாரித்த 'கவியின் கனவு' நாடகம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. இவர் நடித்த 'பக்த ராமதாஸ்' நாடகம் படமாக்கப்பட்ட போது நாடகத்தில் இவர் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா, வேடத்தை படத்திலும் ஏற்று நடித்து தமிழ் சினிமாவுக்கும் புதுமுக நடிகராக அறிமுகமானார்.

'திகம்பரசாமியார்' படத்தில் 11 விதமான கெட்டப்பில் தோன்றி அசத்தினார். அந்த வகையில் சிவாஜ், கமலுக்கெல்லாம் முன்னோடி நம்பியார். 'கல்யாணி கஞ்சன்', 'நல்லதங்கை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

'கவிதா', 'வித்யாபதி', 'ராஜகுமாரி', 'மர்மயோகி', 'மோகினி', 'தூறல் நின்னுப்போச்சு' போன்ற படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்திருக்கிறார்.

கொடூரமான வில்லனாக நடித்த இவர் 'ரகசிய போலீஸ 115', 'கண்ணே பாப்பா', 'சுபதினம்', 'பாசமலர்', 'மக்களைப் பெற்ற மகராசி', 'வேலைக்காரி' போன்ற படங்களில் நல்லவராகவும் நடித்திருக்கிறார்.

Nenjam Marappathillai 22

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 'ராஜகுமாரி' முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.என்.நம்பியார் இணைந்து நடித்திருக்கிறார். இதில் 'மந்திரிகுமாரி', சர்வாதிகாரி', 'எங்க வீட்டு ப்பிள்ளை', 'குடியிருந்த கோயில்', 'நான் ஆணையிட்டால்', 'புதிய பூமி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'திருடாதே', 'வேட்டைக்காரன்', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'தங்கப் பதுமை', 'ராஜபக்தி', 'அன்னை இல்லம்', 'தெய்வமகன்', 'லட்சுமி கல்யாணம்', 'நிச்சயதாம்பூலம்', 'குலமா குணமா', ' சிவந்தமண்', 'திரிசூலம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

'தேவதாஸ்', மிஸ்ஸியம்மா', போன்ற படங்களிலும் 'நெஞ்சம் மறப்பதில்லை', படத்தில் திகிலூட்டும் வகையில் வில்லத்தனம் காட்டியிருப்பார்.

எம்.என்.நம்பியார் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். 'ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்திலும், 'தேவதா' என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.

Nenjam Marappathillai 22

'பக்த ராமதாஸ்' (1935) முதல் விஜயகாந்த் நடித்த 'சுதேசி' (2006) வரை 750 படங்களுக்குமேல் நடித்து முடித்திருக்கிறார். நீண்ட நெடுநாளைய கலைப் பயணமிருந்தும் இவரைப்பற்றி எந்த கிசு கிசுவும் பத்திரிகைகளில் வந்ததில்லை.
இவர் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'நல்லவன் வாழ்வான்' படங்களிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதிய 'அபிமன்யூ', 'அரசிளங்குமாரி', 'ராஜகுமாரி', போன்ற படங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பலபடங்களிலும், வி.என்.ஜானகியுடன் 'வேலைக்காரி', மோகினி' ஆகியப் படங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவுடனும் நடித்திருக்கிறார்.

தமிழக அரசிடமிருந்து 1967ஆம் ஆண்டு கலைமாமணி வருது, 1990ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது, 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா விருது என்றபல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எம்.என்.நம்பியார் 5.3.1919 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணனூர் தாலுக்காவில் மஞ்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற தனது பெயரை சுருக்கி எம்.என்.நம்பியார் என்று வைத்துக் கொண்டார்.
1946ஆம் ஆண்டு ருக்குமணி என்ற பெண்மணியை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சிநேகலதா என்ற ஒரு பெண்ணும் உண்டு.

திரைப்படத் துறையில் 71 ஆண்டுகள் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்த எம்.என்.நம்பியார், கடந்த 19.11.2008 ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இறைவனடி சேர்ந்தார். நம்பியாரின் மூத்த மகன் சுகுமாறன் நம்பியார் 2012-ல் காலமானார்.

எம்.என்.நம்பியார் போன்ற தலைச்சிறந்தகலைஞர்கள் அதிலும் பன்முகம் கொண்ட கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு இனி கிடைப்பார்களா? கிடைக்க மாட்டார்கள்
அதுதான் காலகாலத்துக்கும் நமக்குள் இருக்கப் போகிற ஏக்கமும் ஏமாற்றமும்!

(தொடரும்...)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X