சொன்னது தப்பாய்யா...? வடிவேலு
பெரிய, பெரிய காரா இருக்கே, கொஞ்சம் ஓரமா நிறுத்துங்கப்பா என்று சொன்னதற்காக தகராறு செய்து விட்டனர் விஜயகாந்த் ரசிகர்கள். நான் சினிமாவில்தான் காமெடியன், ஆனா, நானும் மதுரைக்காரன்தான். எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் வடிவேலு.
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே நடந்த பெரும் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனதால் கோலிவுட்டே பரபரப்பாகிக் கிடக்கிறது.
விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் உள்பட 6 பேரை தூக்கி கைது செய்து உள்ளே போட்டுள்ளனர். வடிவேலு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் நடந்தது என்ன என்று வடிவேலு விளக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அய்யா, நான் காமெடி நடிகர் தான், வில்லன் கிடையாது. அன்னக்கி என்ன நடந்துச்சுன்னா, என்னுடைய அலுவலகத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படக் கதை குறித்து விவாதம் நடத்திவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பினேன்.
வெளியில், அலுவலக வாசலில் ஏகப்பட்ட வண்டிகள் நின்றிருந்தது. யாரோட வண்டிப்பா என்று விசாரித்தேன். அப்போது அங்கே நின்று கொண்டிருந்தவர், இந்த வண்டி எல்லாம் கேப்டன் வீட்டுக்கு வந்தது என்றார்.
சரிப்பா, எல்லாம் பெரிய வண்டியா இருக்கு, கொஞ்சம் ஓரமா நிறுத்துங்கப்பா என்று சொன்னேன். அதற்கு அவரும் சரின்னு சொல்லி விட்டு போனார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் என்ன என்று விசாரித்தேன். அங்கிருந்தவர்கள் கேப்டனோட தங்கை கணவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தம் தெரிவிச்சுட்டு நான் வீட்டுக்கு கிளம்பி போயிட்டேன்.
நான் போன பிறகு, ஒரு பெரிய கும்பல் வந்து என்னை கேவலமாக திட்டி விட்டு ஆபிஸ் மீது கல்லை விட்டு எறிந்துள்ளனர். ஆபிசில் இருந்த எனது ஊழியர்கள் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது விஜயகாந்த் ரசிகர்கள் அவர்களையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்து நான் அலுவலகத்திற்கு வந்தேன்.
பின்னர் நானும் எனது வக்கீலும் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் போய் புகார் கொடுத்தோம். நான் குடிபோதையில் இருந்ததாக விஜயகாந்த் தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். நான் போதையில் இருந்தால் காவல் நிலையத்திற்குள் போவேனா. துக்கம் விசாரிக்க வந்த அவர்கள் தான் நல்ல போதையில் இருந்தார்கள்.
படத்துல தான் நான் காமெடியன். ஆனால் நானும் மதுரைக்காரன்தான். எவருக்கும் நான் பயப்பட மாட்டேன். நான் அஞ்சுவது என்னுடைய மனசாட்சிக்கு மட்டும்தான். போலீஸ் ஸ்டேஷனில் என்மீது புகார் கொடுக்க வந்தவர்கள் எல்லோரும் நல்ல மப்பில் இருந்து விட்டு என் மீது அபாண்டமாக பழி சுமத்துவதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது.
விஜயகாந்த் நடித்த தர்மபுரி, சபரி, பேரரசு படத்தில் என்னை நடிக்க கேட்டார்கள். ஆனால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த கடுப்பைத்தான் என் மீது காட்டியுள்ளனர். தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர், பழி வாங்கப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் வடிவேலு.
ஒரே ஊர்க்காரவுக, இப்படியாய்யா அடிச்சுக்கிறது, பார்த்து சூதானமா இருந்துக்குங்கப்பா!


Click it and Unblock the Notifications











