அடுத்தபடியாக விக்ரம், அஜீத், சிம்பு!

தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று முன்பு ரஜினிகாந்த்தை பாமக நெருக்கியது. இதையடுத்து சந்திரமுகி, சிவாஜி ஆகிய இரு படங்களிலும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியில் ரஜினி நடிக்கவில்லை. இதை தொடரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த புகையிலை எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நாங்கள் சொன்னதைக் கேட்டு சிகரெட் பிடிப்பது போல நடிப்பதை ரஜினி விட்டு விட்டார். அதேபோல, தம்பி விஜய்யும் இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற விஜய்யும், இனிமேல் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார். இதை பாமக வரவேற்றுள்ளது. அன்புமணியும் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில் அன்புமணியைத் தலைவராகக் கொண்ட பசுமைத் தாயகம் அமைப்பு மற்ற முன்னணி நடிகர்களான விக்ரம், அஜீத், சிம்பு ஆகியோரும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளது.
பாமகவின் கிளை அமைப்பு பசுமைத் தாயகம். இது ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாகும். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளம் நடிகர்களான அஜீத், சிம்பு போன்றோர் தங்களது படங்களில் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள். இதை அவர்கள் எதிர் வரும் படங்களில் இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











