ரஜினி நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் திரையுலகம்!

ஆவடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திரையுலகினரும் பொதுமக்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன்.
உடல் நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன்.
"சூப்பர்ஸ்டாராக பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து பேரும் புகழுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு உடல்நலமில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப்போய்விட்டேன்.
என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே சூப்பர் ஸ்டார்தான்.
அவரைப் போலவே தீவிர ராகவேந்திரர் பக்தனான நான், ராகவேந்திரருக்காக திருக்கோவில் கட்ட தீர்மானித்தபோது, சிலை வடிவமைக்க மாதிரி புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, இதுபோல் சிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது எண்ணப்படியே சிலையை வடித்து ஆவடியில் ராகவேந்திரருக்கு திருக்கோவிலை நிர்மாணித்தோம்.
ரஜினி எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு, ரஜினி உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்ய இருக்கிறோம்.
ரஜினி உடல்நலத்துக்காக நடைபெற உள்ள இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பிரார்த்தனை செய்யவும்.
கோடானுகோடி மக்களின் சார்பாக கடவுளின் முன் வைக்கப்படும் நம் கோரிக்கை ஏற்று நிச்சயம் கடவுள் அருள் புரிவார். ரஜினி விரைந்து நலம் பெறுவார்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











