3 தலைமுறை பாடகர்களுடன் மறக்க முடியாத அனுபவம்- ஏ ஆர் ரஹ்மான்

உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில், அடுத்த மாதம் (ஜுன்) 23-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மாநாட்டின் மைய நோக்க பாடலை, முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைத்த அனுபவம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"கலைஞர் எழுதிய பாடலுக்கு, நான் முதல் முறையாக இசையமைத்துள்ளேன். அவருடைய இலக்கிய தமிழுக்கு இசையமைத்தது, புதிய அனுபவமாக இருந்தது. கிராமிய இசை, ராப், சுபி ஆகிய அனைத்து இசையும் கலந்து இசையமைத்து இருக்கிறேன். கிதார், நாதஸ்வரம், தவில், தப்பட்டை ஆகிய இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
டி.எம்.சவுந்தரராஜன் முதல் ஸ்ருதிஹாசன் வரை 3 தலைமுறையைச் சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். முதல் வரியை, டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருக்கிறார்.
அவருடன் சேர்ந்து பணிபுரியவேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. அந்த ஆசை, இந்த பாடல் மூலம் நிறைவேறியது.
நான் (ஏ.ஆர்.ரஹ்மான்), யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர் சேர்ந்து அந்த பாடலை பாடியிருக்கிறோம்.
இது வாழ்க்கையில் மறக்க முடியாத நல்ல அனுபவம்", என்றார் ரஹ்மான்.
பின்னர் நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
'ஆஸ்கார் விருது பெற்றபின், புதிய தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொள்ளாதது ஏன்?', என்று கேட்டதற்கு, "நல்ல படத்துக்காக காத்திருக்கிறேன். நான் இசையமைத்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சமீபத்தில்தான் திரைக்கு வந்தது. அடுத்து இசையமைத்த 'ராவணன்' படம் திரைக்கு வர இருக்கிறது. இப்போது, 'எந்திரன்' படத்துக்கு இசையமைத்து வருகிறேன்'' என்றார் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











