முரளிக்கு அப்பாவாகவும் அதர்வாவிற்கு தாத்தாவாகவும் நடித்த ராஜ் கிரண்... பல சுவாரசிய தகவல்
சென்னை: களவாணி, நையாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் சற்குணம் தற்சமயம் இயக்கியுள்ள திரைப்படம் பட்டத்து அரசன்
சண்டி வீரன் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அதர்வாவை இயக்கியிருக்கிறார் சற்குணம். ராஜ்கிரண் அதர்வாவிற்கு தாத்தாவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் பட்டத்து அரசன் படம் தொடர்பான பேட்டி ஒன்றில் அதில் நடித்துள்ள நடிகர் ராஜ்கிரண் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

4.50 ரூபாய் - 1.10 கோடி
சென்னைக்கு வந்து முதன் முதலில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த ராஜ்கிரனுக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 4 ரூபாய் 50 பைசாவாம். பின்னர் அதே அலுவலகத்தில் நிரந்தர பணி கிடைத்து மாதம் 180 ரூபாய் சம்பள உயர்வு பெற்று, அதன் பின் படிப்படியாக வளர்ந்து ஒரு விநியோக கம்பெனியை தொடங்கினார். அதன் பிறகு கதாநாயகனாக நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்த ராஜ்கிரணுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது.

சிவாஜிதான் காரணம்
நடிகர்கள் மோகன், ராமராஜன் போன்றவர்கள் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றிருக்க, நீங்கள் எப்படி குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு மாறினீர்கள் என்ற கேள்விக்கு, நந்தா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க சம்மதித்து மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு என்பதால், அங்குள்ள சீதோஷண நிலைக்கு சிவாஜியின் உடல் நலம் குன்றிவிடும் என்று கூறி பிரபு அந்த படத்தில் அவரை நடிக்க வேண்டாம் என்று அறிவுருத்தினாராம்.

மாறிய தருணம்
இயக்குநர் பாலாவிற்கு அப்போது ராஜ்கிரண் மனதில் தோன்றியிருக்கிறார். அவரிடம் சென்று, சிவாஜி நடிப்பதாக சொன்ன கதாபாத்திரம் இது. அவர் நடிக்க முடியாததால் உங்களிடம் கதை கூறுகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் கதையை கூறினாராம் பாலா. சிவாஜி ஐயா நடிக்க சம்மதித்த கதாபாத்திரம் தனக்கு வந்ததை எண்ணி பெருமையோடு நடித்தேன். அதன் பின்னரே குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தேன் என்று ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.

அப்பா - தாத்தா
கஸ்தூரி ராஜா தயாரித்து இயக்கிய வீரத்தாலாட்டு என்கிற படத்தில் நடிகர் முரளியின் அப்பாவாக நடித்துள்ள ராஜ்கிரண் இப்போது பட்டத்து அரசன் திரைப்படத்தில் அதர்வாவின் தாத்தாவாக நடித்துள்ளார். முரளி தன் மீது எப்போதும் மிகுந்த அன்பு வைத்திருந்த நபர் என்றும் உடன் பிறந்த அண்ணனை அழைப்பது போல் உணர்வோடு தன்னை அண்ணன் என்று அழைப்பார் என்றும் தானும் அவரை சொந்த தம்பி போல பாவித்தேன் என்றும் ராஜ்கிரன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











