அமிதாப்பை வரவழைக்க ராஜபக்சே கடைசி கட்ட முயற்சி!

விழாவுக்கு வர மறுத்துவிட்ட அமிதாப் பச்சனை எப்படியாவது வரவழைக்க ராஜபக்சே தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அரசுத் தரப்பிலும் அவரைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல் சம்பவங்களை மறைக்கவே, இந்த விழாவை இலங்கை அரசு நடத்துவதாக தமிழ் உணர்வாளர்கலும் தென்னிந்திய திரைப்பட சம்மேளனமும் குற்றம்சாட்டி வரும் நிலையில் சல்மான்கான், விவேக் ஓபராய் போன்ற ஒருசில நடிகர்கள் மட்டும் கொழும்பு சென்றுள்ளனர். கொழும்பு செல்லும் எந்தவொரு நடிகர், நடிகைகளின் படங்களை திரையிடமாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தனி முயற்சி எடுத்துக்கொண்டதே காரணம் என்றும், கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைப்பதற்காகவே ராஜபக்சே இந்த முயற்சியை எடுத்துள்ளார் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
பல்வேறு அமைப்புகளின் போரட்டங்களை அடுத்து அமிதாப் பச்சன், கமல், மணிரத்னம் ஆகியோர் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் மூன்று நாள் நடைபெறும் திரைப்படவிழா கொழும்புவில் நேற்று துவங்கி உள்ளது.
சல்மான்கான், விவேக் ஓபராய் போன்ற ஒருசில நடிகர்களை தவிர, பிரபல நடிகர்கள் யாரும் விழாவுக்கு செல்லவில்லை.
இதனால் கொழும்பில் நடைபெறும் விழா களையிழந்து காணப்படுகிறது.
3 நாள் நடக்கும் இந்த விழாவில் கடைசி நாள் அன்று இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார். அன்று ஒரு நாள் மட்டுமாவது அமிதாப் பச்சனை கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய அரசுத் தரப்பிலும் அவரிடம் பேசிவருவதாக இலங்கை சுற்றுலாத் துறை அறிவித்து குழப்பம் விளைவித்துள்ளது. அமிதாப் இதுவரை வெளிப்படையாக தனது கருத்துக்களைக் கூறாததால் இந்த விஷயத்தில் நாளை வரை குழப்பம் தொடரும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











