ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா... ரஜினி, கமல் பங்கேற்பு!
சென்னை: இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்தி இருவருக்கும் 60 பொற்காசுகளைக் கொண்ட பொற்கிழி அளித்து கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் புத்தம் புதிய போர்டு பியஸ்டா காரும் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
அதேபோல பின்னணிப் பாடகர்கள் டி.எம்.செளந்தரராஜன், பிபி சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டோரையும் கெளரவித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.
முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் இருந்தன. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது..


Click it and Unblock the Notifications












