ரஜினி விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்!

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.
அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.
இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.
விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.
மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.
இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications