அண்ணாமலை பாம்பு காட்சியில் ரஜினி சாரின் ஐடியா வெர்க் அவுட் ஆனது... இயக்குநரின் மலரும் நினைவுகள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் என்றால் அது சுரேஷ் கிருஷ்ணா அவர்கள்தான். ரசிகர்களின் முதல் தேர்வும் இந்தப் படம்தான்.
பாட்ஷா மட்டுமல்லாமல் அண்ணாமலை, வீரா, பாபா ஆகிய திரைப்படங்களையும் அவர்தான் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் அண்ணாமலை திரைப்படம் பல முக்கியமான அம்சங்களை பெற்றது.
தொடர்ச்சியாக ரஜினி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜாவிற்கு பதிலாக தேவா அப்படத்தில் ஒப்பந்தமானார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் வைரமுத்துவிற்கு ரஜினி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

விசு - வசந்த் - சுரேஷ் கிருஷ்ணா
இயக்குநர் பாலச்சந்தர் ரஜினிகாந்தின் கால் ஷீட் வாங்கிய பிறகு, அப்போது உச்சத்தில் இருந்த விசுவைதான் இயக்குநராக நியமித்தாராம். ரஜினிகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகவே, அந்த வாய்ப்பு இயக்குநர் வசந்திற்கு சென்றது. ஷூட்டிங் துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வசந்தும் படத்தை விட்டு விலகியதால், இறுதியாக அந்த வாய்ப்பு சுரேஷ் கிருஷ்ணாவிற்கு சென்றுள்ளது. மூவருமே பாலச்சந்தரின் துணை இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாம்பு செண்டிமென்ட்
ரஜினியின் படங்கள் என்றாலே பாம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற வேண்டும். இடம்பெற்றால் படம் வெற்றி என்ற செண்டிமென்ட் உள்ளது. பைரவி திரைப்படம் தொடங்கி, தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை, முத்து, படையப்பா, சந்திரமுகி, எந்திரன் என்று பல படங்களில் பாம்பு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அனைத்துமே பிரபலமான காட்சிகள்.

கடவுளே... கடவுளே...
அண்ணாமலை படத்தில் பாம்பை நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டதும் முதலில் படத்தின் வசனகர்த்தா வசனம் எழுதிக் கொடுத்தாராம். ஆனால் பாம்பைக் கண்டு பயத்தில் இருக்கும்போது வசனம் வேண்டாம் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். இருப்பினும் ஏதோ ஒன்று குறைகிறதே என்று ஷூட்டிங்கில் அவர் யோசித்தபோதுதான் "கடவுளே... கடவுளே..." என்று குஷ்புவை பார்த்ததும் நான் சொல்லிவிட்டு வெளியே செல்கிறேன் என்று யோசனை கூறியுள்ளார் ரஜினிகாந்த். அவர் பேசப்போவது யாருக்கும் தெரியாத சூழ்நிலையில், ஷாட்டில் திடீரென்று பேச அனைவரும் கைதட்டி ரசித்தார்கள் என்று சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

பல சுவாரஸ்யங்கள்
படத்தில் இது போல பல சுவாரஸ்யங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் இன்னொன்றுதான் ஜனகராஜ் பேசிய "ஆ..." என்ற வசனம். பாம்பு காட்சி முடிந்ததும் ரஜினி அந்தச் சம்பவத்தை தனது நண்பனான ஜனகராஜிடம் கூற வருவார். அப்போது "ஆ..." என்ற ஒற்றைச் சொல்லை வைத்தே அந்தக் காட்சியில் பிரமாதமாக பேசி நடித்திருப்பார் ஜனகராஜ். சமீபத்தில் அது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











