என்னை பார்த்து "காசு பணம் துட்டு மனி மனி" பாடலை பாடிய ரஜினி... கருணாகரன் நெகிழ்ச்சி
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறும்பட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கருணாகரன்.
கதாநாயகனாகவும், காமெடியனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கருணாகரன்.
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் லிங்கா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் பற்றி கூறியுள்ளார்.

குறும்படங்கள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியிலேயே பல குறும்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அப்போதே பிரபலமானார் கருணாகரன். அதன் பின்னர் அந்தக் குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் திரைப்படங்கள் இயக்கும்போதும் அதில் தொடர்ந்து நடித்தார்.

முன்னணி ஹீரோக்கள்
நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நண்பனாக நடித்துள்ள கருணாகரன் உப்பு கருவாடு என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். மொழி திரைப்பட இயக்குநர் ராதா மோகன் இயக்கியிருந்த அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் யாமிருக்க பயமே போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ஜொலித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஜீவி இரண்டாம் பாகம் வெளியானது. அடுத்ததாக காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

லிங்கா
வழக்கமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்களில் ரமேஷ் கண்ணா கதாநாயகனுடைய நண்பனாக நடிப்பார். அப்படித்தான் படையப்பா திரைப்படத்திலும் ரஜினிக்கு நண்பனாக நடித்திருப்பார். லிங்கா திரைப்படம் எடுக்கப்படும் போது அவர் வேண்டாம் என்று ரஜினி கூறியதாக ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். லிங்கா திரைப்படத்தில் சந்தானம், கருணாகரன் போன்ற இளம் நடிகர்கள் ரஜினிக்கு நண்பர்களாக நடித்திருந்தனர்.

முதல் நாள் படப்பிடிப்பு
லிங்கா திரைப்படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்துடன் நடிக்கும் நாளன்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கருணாகரனை ரஜினிகாந்திடம் அறிமுகப்படுத்தினாராம். அப்போது,"இவரை நன்கு தெரியும். சூது கவ்வும் படத்தில் நடித்தவர்தானே" என்று கருணாகரன் பெயரைக் குறிப்பிட்டு ரஜினிகாந்த் இவருடன் பேசினாராம். கருணாகரனுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் அவரையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாராம். அதன் பின்னர்தான் சகஜமாக அவருடன் நடிக்க ஆரம்பித்தார் கருணாகரன். ஒரு நாள் தனது தோள் மீது கை போட்டு காசு பணம் துட்டு பாடலை பாடிக் கொண்டே சூது கவ்வும் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தீர்கள் என்று தன்னை பாராட்டினாராம். அப்போது, எந்திரன் பிரவ்யூ ஷோவில் உங்களை பார்ப்பதற்காக காம்பவுண்டுக்கு வெளியே கூட்டத்தில் நின்று கை காட்டினேன். நீங்களும் கூட்டத்திற்கு கைகாட்டினீர்கள் அப்படி உங்களை பார்த்த நான் முதல் நாளில் உங்களுடன் நடிக்கும் போது பதட்டமாகி விட்டேன் என்று ரஜினியிடம் கூறியதாக கருணாகரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











