இவர்கள் இருவர்தான் எனது குருநாதர்கள்..அட வடிவேலு யாரைச் சொல்கிறார் பாருங்கள்
சென்னை: இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் வடிவேலுவிற்கு, அதன் தயாரிப்பாளர் சங்கர் மற்றும் இயக்குநர் சிம்புதேவனுடன் பிரச்சனை ஏற்பட்டது.
ஷூட்டிங்கிற்கு சரி வர வருவதில்லை, தேர்வு செய்யப்பட்ட உடைகள் அணிவதில்லை, இயக்குநர் சொல்வதை கேட்பதில்லை போன்ற பல பிரச்சனைகள் எழும்பியது. அதனை தொடர்ந்து இருவர் மீதும் பல அவதூறுகளை பரப்பி வந்தார் வடிவேலு.
இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த சங்கங்கள் முடிவு செய்தபோது வடிவேலு அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

தடை நீக்கம்
ஏற்கனவே கேப்டன் விஜயகாந்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு இந்தத் தடை மூலம் இன்னும் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் மீதிருந்த தடை விலகி இப்போது லைகா நிறுவனத்தில் மட்டும் நடிக்க ஐந்து படங்களில் ஒப்பந்தமானதாக செய்தி வெளியானது. அதில் ஒன்றுதான் நாய் சேகர்.

நாய் சேகர் ரிடர்ன்ஸ் - மாமன்னன்
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்துள்ளது. ஷிவாங்கி, ரெட்டின் கிங்ஸ்லி இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு கோரியோகிராபி செய்துள்ளார். இதே போல் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிப்பில் மாமன்னன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வடிவேலுவின் பெயர் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண் – கமல் ஹாசன்
நடிகர் வடிவேலு கொடுத்த பேட்டி ஒன்றில், உங்களது குருநாதர் யார் என்று ஆங்கர் கேட்க, தனக்கு சினிமா வாய்ப்பளித்த நடிகர் ராஜ்கிரன்தான் என்றைக்குமே தனது குரு என்று எந்தவிதமான யோசனையுமின்றி கூறியுள்ளார். அதே போல் தேவர்மகன் படத்தில் நடிக்கும்போது, நடிகர் கமல் நிறைய விஷயங்களை தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும், அவரும் தனக்கு குரு என்றும் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

சந்திரமுகி 2
பாபா தோல்விக்கு பின்னர் ரஜினிகாந்த் கொடுத்த மிகப் பெரிய ஹிட் சந்திரமுகி திரைப்படம். இந்தப் படம் வெளியானபோது ரஜினியை விட அதிக பெயர் வாங்கியது படத்தின் கதாநாயகி ஜோதிகா மற்றும் வடிவேலு ஆகிய இருவர்தான். இன்னும் சொல்லப்போனால், அந்தக் கதைக்கு ரஜினி ஓகே சொன்ன பிறகு முதலில் வடிவேலுவின் தேதிகளை வாங்கிவிடுங்கள் என்றுதான் கூறியுள்ளார். இப்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை எடுக்க P.வாசு லைகா நிறுவனத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார். ஏற்கனவே சிவலிங்கா திரைப்படத்தில் P.வாசு, லாரன்ஸ் மற்றும் வடிவேலு கூட்டணி ஒன்றாக பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











