வானத்தை போல படத்தில் சரத் குமார் வேண்டாம் என்று சொன்ன இயக்குநர் விக்ரமன்
சென்னை: 1990-களில் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், அஜித், விஜய் என்று பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்.இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் வெளியான வானத்தைப்போல மற்றும் சூரியவம்சம் திரைப்படங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தற்சமயம் இவருடைய மகன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வானத்தை போல
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே...' பாடலில் வரும் வானத்தைப்போல என்ற சொல்லை படத்தின் தலைப்பாக வைத்தனர். 2000 ஆண்டின் முதல் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் விஜயகாந்த் கேரியரில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சாந்தமான அண்ணன்
வழக்கமாக ஆக்க்ஷன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் அவர்கள் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இரண்டுமே சற்று சாந்தமான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி இருக்கும் அதனைக் கூட விஜயகாந்த் முதலில் வேண்டாம் என்று கூறினாராம். காரணம் இது விஜயகாந்த் படமாக இல்லாமல் விக்ரமன் படமாக இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆனால் விஜயகாந்தின் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் கிளைமாக்ஸில் ஒரு சண்டைக் காட்சியை வைத்தாராம் விக்ரமன்.

சூர்யவம்சம்
வானத்தைப்போல திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம், அதற்கு முன்னர் விக்ரமன் இயக்கியிருந்த சூரியவம்சம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது தான். நடிகர் சரத்குமாரின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப் படம் என்றால் அது சூரியவம்சம்தான். தமிழ்ப் படங்களிலேயே இதுவரை அதிக முறை திரையரங்குகளில் பார்க்கப்பட்ட திரைப்படம் சூரியவம்சம்தான் என்றும் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டது அந்தப் படத்திற்குத்தான் என்றும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சரத் குமாருக்கு வேண்டாம்
நாட்டாமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி சரத்குமாருக்காக விக்ரமனிடம் கதை கேட்டபோது முதலில் வானத்தைப்போல கதையைத்தான் கூறியுள்ளார். ஆர்.பி. சௌத்ரிக்கும் சரத்குமாருக்கும் அந்தக் கதை பிடித்து போய்விட்டதாம். ஆனால் ஒரு நாள் திடீரென அந்த படம் அவருக்கு வேண்டாம் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தபோது சூரியவம்சம் என்ற கதையை எழுதியுள்ளேன். அந்தப் படத்தை எடுக்கலாம் என்று கூறினாராம். ஏனென்றால் நாட்டாமை திரைப்படத்தில் ஒரு வீரமான ஆண்மகனாக சரத்குமாரை அனைவரும் பார்த்துவிட்டார்கள். அப்படி இருக்கும்போது இதில் சாந்தமான கதாபாத்திரத்தில் காமராஜர் சட்டை அணிந்து கொண்டு குடுமியும் கடுக்கனும் போட்டுக் கொண்டு அமைதியாக சரத்குமார் வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் சூரியவம்சம் படத்தை துவங்கினார்களாம். சரத்குமாருக்கு இந்த கதை சொன்ன போது இரட்டை வேடங்கள் இல்லாமல் அண்ணன் கதாபாத்திரம் மட்டும்தான் கதாநாயகன் நடிப்பது போல இருந்ததாம். பின்னர் விஜயகாந்த் ஒப்பந்தமான போதுதான் இரட்டை கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார் என விக்ரமன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











