விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய், அஜீத்!
ஒரு ரேஸில் ஒரே நேரத்தில் இருவர் முதலிடத்தில் வந்து ஜெயிப்பதைப் போல, இந்தப் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் இரண்டு படங்களுமே அபாரமான வரவேற்பு பெற்றுள்ளன ரசிகர் மத்தியில்.
இது தயாரிப்பாளர்களையும், சினிமா உலகினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு ஹீரோவின் படம் தோற்றால், எதிர் முகாம் ரகசிய பார்ட்டி வைத்துக் கொண்டாடும் மோசமான மனநிலை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நிலவுகிறது.

சினிமா நட்பு
ஆனால் சமீப காலமாக கோடம்பாக்கத்தில் அந்தப் போக்கு குறைந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் என்ற கோணத்தில் ஆங்காங்கே அடித்துக் கொண்டாலும், நட்சத்திரங்கள் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவதால், ஒருவர் வெற்றியை அடுத்தவரால் ரசித்து பாராட்டும் ஆரோக்கிய நிலை உண்டாகியுள்ளது.

வித்தியாசம் பெரிசா இல்ல
ஜில்லா, வீரம் இரு படங்களுக்கும் கிட்டத்தட்ட சமமான அரங்குகள்தான் ஒதுக்கப்பட்டன. விஜய் படத்துக்கு கேரளாவில் கூடுதலாக அரங்குகள் கிடைத்தன. கேரள சினிமா காணாத அளவு பெரும் வரவேற்பும் கிடைத்தது. இதனால் ஆரம்ப நாள் வசூலில் இருவர் படங்களுக்கும் ஓரிரு கோடிகள் வித்தியாசம் இருந்தது.

சம வசூல்
மற்றபடி திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஜில்லாவுக்கும் வீரத்துக்கும் சமமான ரசிகர்கள், வசூல் கிடைத்துள்ளது.

விமர்சனங்களைத் தாண்டி
இந்த இரு படங்களைப் பற்றி மீடியா, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் பலவிதமாக இருந்த போதும், படம் பார்ப்பவர்களின் கொண்டாட்ட மனநிலையில் அவை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

100 சதவீத கூட்டம்
ஜில்லா படத்தில் குறைகள் என சிலவற்றை பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்தப் படத்துக்காகன கூட்டம் கொஞ்சமும் குறையவில்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையன்று 100 சதவீத கூட்டம். எங்கும் ஹவுஸ்புல். அதற்கு இணையான பார்வையாளர்கள் வீரம் படத்துக்கு.

ரஜினி - கமலுக்குதான்
தமிழ் சினிமாவில் இதற்கு முன் ரஜினி - கமல் படங்கள் சிலவற்றுக்குதான் இதுபோன்ற வரவேற்பும் கூட்டமும் குவிந்துள்ளது.

ஆர்பி சவுத்ரி
"இது சந்தோஷமான விஷயம்தான். ஒரு தயாரிப்பாளராக அந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். விஜய் படமும், அஜீத் படமும் ஒன்றுசேர ஜெயித்தது சினிமா உலகுக்கு இந்த புத்தாண்டில் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது," என்கிறார் ஆர்பி சவுத்ரி.

வெங்கட்ராம ரெட்டி
இதுகுறித்து பேசிய விஜயா புரொடக்ஷன் வெங்கட்ராம ரெட்டி, "நம்ம படத்தோட அடுத்த படமும் சேர்ந்து ஜெயிக்கிறது எத்தனை அபூர்வம்... ரொம்ப சந்தோஷமா இருக்கு. சினிமா களைகட்டியிருக்கு," என்றார்.

19-ம் தேதி வரை
வரும் 19-ம் தேதி வரை பொங்கல் சீஸன் தொடர்கிறது. அதுவரை இந்தப் படங்களின் வசூலுக்கும் குறைவிருக்காது. அதற்குள் போட்ட முதலுக்கு மேலேயே குவித்துவிடுவார்கள் என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











