இயக்குநர் டூ மகாநடிகன் : நடிப்பின் மெர்சல் மன்னன் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு
சென்னை : இயக்குநராக அறிமுகமாகி தற்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வரும் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள் இன்று.
வாலி, குஷி, நியூ போன்ற இளமைத் துள்ளலான படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கலக்குவதன் பின்னணி என்ன?
நண்பன், இறைவி, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் என தமிழ்த் திரையுலகை ரவுண்டு கட்டி மிரட்டும் மகாநடிகன்.
1999ல் அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 'வாலி' திரைப்படம் வெளியானதில் இருந்தே எஸ்.ஜே. சூர்யா பற்றிய எதிர்பார்ப்புகள் கோலிவுட்டை ஆக்கிரமித்தன. தொடர்ந்து விஜய், ஜோதிகா நடிப்பில் 'குஷி' திரைப்படமும் ஹிட்டடிக்க, அடுத்தடுத்து தானே நடித்து நியூ, அன்பே ஆரூயிரே ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக ஸ்கோர் செய்தபோதும் ஆரம்ப காலங்களில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு கடும் விமர்சனங்களை சந்தித்தது.

நண்பன் கொடுத்த நல்ல தொடக்கம்
'கள்வனின் காதலி,' 'திருமகன்,' 'வியாபாரி' என எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், முதன்முறையாக பிரமாண்ட இயக்குநர் சங்கருடன் கை கோர்த்தார் எஸ்.ஜே. சூர்யா. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் ரியல் பஞ்சவன் பாரிவேந்தன் பாத்திரத்தில் நடித்து சிலிர்க்க வைத்தார் எஸ்.ஜே. சூர்யா.

இறைவி கொடுத்த வரம்
கதைக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்களில் தலை காட்டிய எஸ்.ஜே. சூர்யாவிற்கு 'இறைவி' படத்தில் ஜாக்பாட் அடித்தது. அருள் என்ற இயக்குநர் பாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா, ரசிகர்களின் பரிதாபத்தை ஒருசேர மொத்தமாக வாரி அணைத்துக் கொண்டார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பார்த்த யாரும் கண்கலங்காமல் இருக்க முடியாது.

வில்லாதி வில்லன்
ஹீரோ, முக்கியமான பாத்திரங்கள் என நடித்துக் கொண்டிருந்த எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பிற்கு விருந்தாக அமைந்தது 'ஸ்பைடர்' திரைப்படம். சுடலை என்ற சைக்கோத்தனமான வில்லன் பாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டியது, அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது. ஸ்பைடரில் தொடங்கிய எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம் தொடர்ந்து விஜய்க்கு எதிராக 'மெர்சல்' படத்திலும், 'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு எதிராகவும் செம்மையாக ஒர்க் அவுட் ஆனது.
ஹீரோ வில்லன் ரிப்பீட்டு
"ஹீரோவாக நடிப்பதற்காகவே சினிமாவிற்கு வந்தேன், ஆனால், அவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைத்து விடவில்லை' என பலமுறை கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இன்றோ அவர் எந்த பாத்திரத்தில் நடித்தாலும் தனக்கென ஒரு அக்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஹீரோவாகிவிடுகிறார். கண்களை சுழலவிட்டபடி குரலை ஏற்றி இறக்கி அவர் பேசும் வசனங்கள், ரசிகர்களை குஷிப்படுத்த தவறவே இல்லை.

இன்னும் காலம் இருக்கு
தான் நினைத்த இலக்கை நீண்ட நெடிய போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய எஸ்.ஜே. சூர்யா, தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்காது. பயணங்களில் ஓய்வை விரும்பாத ஜிப்ஸியாக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, தொடர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கு சினிமா ஆர்வலர்களின் பிறந்தநாள் வாழ்த்தாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











