'சாவாரியா' என்னுடையது-ஜனநாதன் குமுறல்
| Click here for more images |
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கி சமீத்தில் திரைக்கு வந்துள்ள இந்திப் படம் சாவாரியா. ராஜ் கபூர் குடும்பத்தில் இருந்து வந்துள்ள ரன்பீர் கபூர், அனில் கபூரின் மகள் சோனம் ஆகியோர் நடித்து பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப்படத்தின் கதை குறித்து இப்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தப் படம் 'வைட் நைட்ஸ்' என்ற ஆங்கில நாடகத்தின் தழுவல் என்றுதான் முதலில் கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகுதான், அப்படியே இயற்கை (ஷாம்-குட்டி ராதிகா-அருண் நடித்து, தேசிய விருது பெற்ற தமிழ் படம்) படத்தை காப்பியடித்திருப்பது தெரிய வந்தது.
இதனைக் கேள்விப்பட்ட இயற்கை படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நேற்று முன்தினம், சாவாரியா படத்தை சென்னையில் போய் பார்த்துள்ளார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர்,
3 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய படம் இயற்கை. என்னுடைய முதல் படம். சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம். வைட் நைட்ஸ் என்ற ஆங்கில நாடகத்தை தழுவித்தான் நானே இந்தப் படத்தை எடுத்தேன். ஆனால் கதையின் பிண்ணனி மற்றும் காட்சிகளை முழுமையாக மாற்றினேன்.
இந்தப் படத்தைப் பார்த்து பிரமித்த இந்திப்பட தயாரிப்பாளர் கே.சி.பொக்காடியா சல்மான் கானை வைத்து இதை அப்படியே இந்தியில் எடுக்கலாம். நீங்களே இயக்கிக் கொடுங்கள் என்று என்னிடம் கூறினார்.
படத்தை சல்மான் கானின் அப்பா சலீம் கானுக்குப் போட்டுக்காட்ட 'இயற்கை' படத்தின் காப்பியை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கூறினார். நானும் படத்தின் பெட்டியை அனுப்பி வைத்தேன். அப்படியே பத்து மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்றுவரை அந்தப் பெட்டி திரும்பி வரவேயில்லை.
ஆனால் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் 'சாவாரியா' படம் வந்திருக்கிறது, இயற்கையின் ஜெராக்ஸ் காப்பி மாதிரி.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஸாலி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படம் நன்றாக ஓடுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. இவ்வளவு பெரிய இயக்குநர் என் படத்தின் கதையை திருடியிருக்கிறாரே என்துதான் வேதனை என்ற ஜனநாதனிடம்,
இப்பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவீர்களா? என்று கேட்டோம்.
தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வேன். நிச்சயம் இது ஒரு மோசடி வேலை. தென்னிந்திய கலைஞர்களின் உழைப்பைத் திருடும் இந்த போக்கை தடுத்தாக வேண்டும் என்றார்.
முதல் கட்டமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம்சேம்பர் ஆகிய அமைப்புகளில் புகார் பதிவு செய்துள்ளார் ஜனநாதன்.


Click it and Unblock the Notifications