தன்னிகரில்லாத் தலைவி… செல்வி ஜெயலலிதாவின் நினைவுதினம் இன்று!
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மைசூர் மாவட்டத்தில் உள்ள பாண்டவபுராவில் ஜெயராம் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாக 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ந் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.
தன்னிகரில்லாத் தலைவி செல்வி ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் அவர் குறித்து சில நினைவலைகள்.

வெண்ணிற ஆடை
1961 ஆம் ஆண்டில் சிறிசைல மகாத்மி என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். 1964 ஆம் ஆண்டில் வெளியான வெண்ணிற ஆடை படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் தனது தடத்தை பதித்தார். சினிமாத்துறைக்கு வந்த ஒரு சில வருடத்திலேயே முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாபெரும் பெற்றது.

127 திரைப்படங்களில்
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கிட்டத்தட்ட 127 படங்களில் நடித்தார்,

எம்ஜிஆருக்கு ஜோடியாக
எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஜோடியை மக்கள் வெகுவாக ரசித்தனர். இவர்கள் இணைந்து நடித்தால் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கும் வந்தது. இதனால் கிட்டத்தட்ட 28 திரைப்படங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாகவே இணைந்து நடித்தனர். அதேபோல சிவாஜியுடனும் 18 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பொதுச்செயலாளர்
1982 அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகி தன் ஆங்கில புலமையால் நாடாளுமன்றத்தில் பல தலைவர்களை கவர்ந்தார். எம். ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதா.

முதலமைச்சரானார்
1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியல் வரையிலும் தனது துணிச்சலான முடிவுகள் மற்றும் திறமையான நிர்வாகம் மூலமாக உற்றுநோக்கப்பட்டவர் ஜெ.ஜெயலலிதா.

5ம் ஆண்டு நினைவு தினம்
செல்வி ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தன்னிகரில்லாத் தலைவியின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் மூழ்கடித்தது. இந்நிலையில், இன்று இவரது 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











