40 ஆண்டுகால திரைப்பயணம்… இன்னும் அதே கம்பீரத்துடன் வடிவுக்கரசி !
சென்னை : வடிவுக்கரசி இயல்பான முகம், கம்பீரமான குரல் அனைத்து கதாபாத்திரத்திற்கும் பொருந்திய நடிகை என பெயர் எடுத்தவர். தாய், தங்கை, அக்கா என எந்த வேடத்திலும் மெருகேற்றும் நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.
450க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், முன்னணியில் உள்ள அனைத்து தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் திரைத்துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 40 வருடமாகிறது. இன்றும் அதே உத்வேகத்துடன் படங்களில் நடித்து வருகிறார்.

அறிமுகம்
1978ம் ஆண்டு கமலின் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் மார்டன் உடையில் அடாவடியாக பேசிக்கொண்டு இங்கிலீஸ்காரி போல அறிமுகமானார் வடிவுக்கரசி. அந்த திரைப்படத்தை அடுத்து கன்னிப்பருவத்திலேயே என்ற திரைப்படத்தில் ராஜேஷூடன் ஜோடி போட்டு நடித்தார். இதையடுத்து பல திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

சிவாஜியின் மனைவியாக
சிவாஜியின் மகளாக வா கண்ணா வா படத்தில் நடித்திருந்த வடிவுக்கரசி, பின்னாளில் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜியின் மனைவியாக அதுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

450க்கும் மேற்பட்ட படங்களில்
தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் வடிவுக்கரசி நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள வடிவுக்கரசி திரைத்துறையில் நுழைந்து 40 வருடத்திற்கு மேலாகியும் இப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இளம் நடிகர்களுடன்
இன்றைய இளம் நடிகர்களுடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு. விஷ்ணு விஷாலுடன் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திலும், கண்ணே கலைமானே திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்திருந்தார்.

தனுஷின் அம்மாவாக
சமீபத்தில் இணையத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருப்பார். முதல் மரியாதையில் கேட்ட அதே கம்பீரமான குரல் வருடங்கள் பல கடந்தும் இன்றும் அப்படியே உள்ளது. வருடங்கள் பல கடந்து மூத்த நடிகை என்று பெயர் எடுத்தும் இன்றும் அதே புன்னகையுடன், அதே உத்வேகத்துடன் நடித்து வருகிறார் வடிவுக்கரசி.


Click it and Unblock the Notifications











