'சுல்தான், ஸ்பைடரை மிஞ்சும்'-செளந்தர்யா

ரஜினியை வைத்து ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான செளந்தர்யா சுல்தான் தி வாரியர் எனும் அனிமேஷன் படத்தை ரூ.40 கோடி செலவில் உருவாக்கி வருகிறார். ஆட்லேப்ஸ் நிறுவனம் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சேர்ந்துள்ளது.
இப்படத்துக்காக ஒரு மாதத்துக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தி ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துள்ளார் செளந்தர்யா. முக்கியமான காட்சிகளை பிரேசில் மற்றும் மெக்சிகோவின் வித்தியாசமான லொகேஷன்களில் படமாக்கி அவற்றை அனிமேஷனுக்கு மாற்றியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட்ட செளந்தர்யா, சுல்தான் திரைப்படம் ஒரு சூப்பர் ஸ்டார் தந்தைக்கு ஒரு மகளாக தான் செலுத்தும் காணிக்கை என்றார் உணர்ச்சிப் பொங்க.
அவர் கூறியதாவது,
என் தந்தையை இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்த நினைத்தேன். அதன் விளைவுதான் சுல்தான் தி வாரியர். இந்தப் படத்தை முதலில் அப்பா ஒப்புக் கொள்ளவில்லை.
அவருக்கு இதில் நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவரை முதலில் கன்வின்ஸ் செய்தேன். என் பதிலில் முழு திருப்தி அடைந்த பிறகுதான் கால்ஷீட் கொடுத்தார். தனது மகள் என்பதற்காக எனக்கு எந்த சலுகையையும் இந்த விஷயத்தில் அவர் கொடுக்கவில்லை.
இந்த படம் ஒவ்வொரு ரஜினி ரசிகரின் கனவையும் நிறைவேற்றும். ஹாலிவுட் தயாரிப்பான ஸ்பைடர்மேனுக்கு இந்தியாவின் பதிலடியாக இப்படம் அமையும்.
ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடம் இருக்கும் செல்வாக்கையும், அவரது இமேஜையும் மனதில் வைத்து இந்த படத்தை மிக ஜாக்கிரதையாக உருவாக்கி இருக்கிறேன்.
வீட்டில் ஒரு தந்தையாக அவர் ஆற்றும் கடமைகளும் என்னை வெகுவாக கவர்கின்றன.
ஒரு காலகட்டத்தில் ஒரு வருடத்தில் 11 படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தபோது நாங்கள் அவரை அதிக நேரம் பிரிந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அப்போது கூட எங்களுக்காக கஷ்டப்பட்டு நேரம் ஒதுக்கி வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வார்.
அமெரிக்காவின் டிஸ்னி லேண்ட் முதல் உள்ளூர் ரெஸ்டாரண்ட் வரை அவருடன் வெளியிடங்களுக்குச் சென்ற அந்த நாட்களை எப்போதும் மறக்க முடியாது.
அப்போதெல்லாம் மற்ற எல்லா விஷயங்களையும் விட அப்பா அருகில் இருப்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும். எளிமைதான் அவருடைய பெரிய பலம்.
என்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க நிறைய பேர் அழைக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால் நின்று எனது படைப்புத் திறனைக் காட்டவே விரும்புகிறேன்.
எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. கோல்ப் விளையாட்டில் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். கோல்ப் விளையாட்டில் ஈடுபடுவதா, அனிமேஷன் துறையில் நுழைவதா என்று ஒரு கட்டத்தில் குழப்பத்தில் இருந்தேன். பின்னர் அனிமேஷன் துறைக்கு வருவது என்று முடிவெடுத்தேன்.
ரஜினி-கமல் இருவரையும் மீண்டும் சேர்ந்து நடிக்க வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











