சூப்பர் ஸ்டாராவது, சுப்ரீம் ஸ்டாராவது: இளையராஜா 'நச்'

மம்முட்டி, சரத்குமார் நடித்துள்ள பழசிராஜா தமிழ்ப் பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படி அதிரடியாக பேசினார் இளையராஜா.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில்,
படத்தின் கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியிருக்கிறார்.
அந்த கதையை படமாக்க முடிவு செய்தபோது, பழசிராஜாவின் தளபதி எடச்சேன குங்கன் கதாபாத்திரத்துக்கு வாசுதேவன் நாயர் சிபாரிசு செய்த நடிகர், சரத்குமார் தான். அவர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
வாசுதேவன் நாயர்தான், உண்மையான சூப்பர் ஸ்டார். கதைதான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது. கதை இல்லை என்றால், சூப்பர் ஸ்டாரும் இல்லை. சுப்ரீம் ஸ்டாரும் இல்லை.
நான், பழசிராஜா படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும், சரத்குமார் நன்றாக நடித்து இருக்கிறார் என்றேன். அதற்காக மம்முட்டி நன்றாக நடிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல.
ஒவ்வொரு படத்துக்கும் நான் இசையமைக்கும்போது, இதுதான் முதல் படம் என்று நினைத்துக்கொள்வேன். உண்மையில், பழசிராஜா தான் என் முதல் படம். இதற்கு முன்பு எத்தனையோ படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், இதுதான் என் முதல் படமாக வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார் இளையராஜா.
இளையராஜாவின் இசையில் பழசிராஜா பாடல்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











