ஏளன பார்வைகள், இழி பேச்சுக்கள்.. எதுவும் சாதாரணம் இல்லை..அடையாளத்தை மாற்றிய சன்னி லியோன் கெத்துதான்
மும்பை: நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர். பஞ்சாபி தம்பதிக்கு கனடாவில் பிறந்த அவர் நீலப்பட நடிகையாகத்தான் முதலில் அறியப்பட்டார். ஒருகட்டத்தில் தனக்கென தனித்த, நல்ல அடையாளம் வேண்டும் என்று நினைத்த அவர் நீல படங்களுக்கு மூடு விழா நடத்தினார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்த அவர் தமிழிலும் நடித்திருக்கிறார். வடகறி, ஓ மை கோஸ்ட், பேட்ட ராப் போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர்; தெலுங்கு, மலையாளம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் மலையாளத்தில் ஷெரோ படத்திலும், ஹிந்தியில் Koka Kola, Helen ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
இந்திய தம்பதிக்கு கனடாவில் பிறந்தவர்தான் சன்னி லியோன். படிப்பை எல்லாம் அங்கேயே முடித்த அவர் பிறகு ஜெர்மனியில் வேலை செய்துவந்தார். அந்த சமயத்தில்தான் அவருக்கு நீலப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக உலகம் முழுவதும் பலரால் அறியப்பட்டார். அதேசமயம் அவர் அப்படி நடித்ததன் காரணமாக வேறு விதமான பார்வைகளையே அவர் மீது அனைவரும் வைத்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் நினைத்து முதலில் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்து அந்த மாதிரியான படங்களிலேயே நடித்துவந்தார்.
ஒதுங்கிய சன்னி: ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் நீலப்பட நடிகை என்ற முத்திரைதான் இருக்குமோ என்று நினைத்து அந்த உலகத்திலிருந்து வெளியேறினார். அதனையடுத்து இந்தியாவுக்கு வந்த அவர் 2011ஆம் ஆண்டு நடந்த ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவர் வெல்லாவிட்டாலும் அந்த சீசனுக்கு சன்னிதான் ஒரு பிராண்டாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீலப்பட உலகத்திலிருந்து ஒதுங்கிவிட்டாலும் அவரை இந்த பொது சமூகம் ஒரு நீலப்பட நடிகையாகவே தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தது.
கலங்காத சன்னி லியோன்: இருந்தாலும் சன்னி லியோன் அதனை பார்த்து கலங்கவில்லை. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு ஜிஸ்ம் 2வில் நடித்தார். ஒரு பெண் கவர்ச்சி நடிகையாக இருந்தாலே அவருக்கு தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களை கொடுப்பதுதான் இந்திய திரையுலகின் ஒரு விதி. சன்னியோ அந்த மாதிரியான பட உலகிலிருந்து வந்திருந்தார். பிறகு கேட்கவா வேண்டும். ஜிஸ்ம் 2வில் அவருக்கு அதீத கவர்ச்சி கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவரும் போல்டாக ஏற்று நடித்தார்.

வரிசையான படங்கள்: முதல் படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் ஜாக்பாட், ஷூட் அவுட் அட் வதாலா, ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோச்சா ஹை, ஒன் நைட் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் அவர் நடிக்க நடிக்க அவர் மீது இருந்த நீலப்பட நடிகை என்ற முத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் இப்போது பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே அவர் டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.
குறையாத பேச்சுக்கள்: சாதாரண படங்களில் நடித்தாலும் ஒருவரை திருமணம் செய்தாலும், சாதாரண பெண்ணாக வாழ ஆரம்பித்தாலும் அவரைப் பற்றிய ஏளன பார்வையும், கிண்டல் பேச்சுக்களும், இரட்டை அர்த்த பேச்சுகளும் குறையவே இல்லை. அவரை வைத்து தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பலரும் பல கதைகளை சொன்னார்கள். முக்கியமாக அவர் டேனியல் வெப்பரை திருமணம் செய்துகொண்டபோது இந்த சமூகம் சன்னியை பற்றி பேசியதெல்லாம் அருவெருப்பின் உச்சம். இது ஒருபக்கம் இருக்க பாலிவுட்டை பொறுத்தவை முன்னணி ஹீரோக்கள் எல்லாம் சன்னியோடு நடித்தால் தங்களது இமேஜ் பாதிக்கப்பட்டுவிடும் என்று கருதி மறுத்துக்கொண்டே வந்தார்கள்.
அனைவருக்கும் சம்மட்டி அடி கொடுத்த சன்னி: தன்னுடைய கடந்த காலத்தை வைத்து தன்னை நிகழ்காலத்தில் எடை போடுபவர்களை பற்றியெல்லாம் துளிக்கூட கவனத்தில் கொள்ளவில்லை சன்னி லியோன். கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார். தன்னை நிராகரித்தவர்களை மௌனமாக கடந்து சென்றார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அனைவருக்கும் ஒரு சம்மட்டி அடியை கொடுத்தார் அவர். அதாவது தாங்கள் பெரிய சூப்பர் ஸ்டார்கள், சமூகத்திலேயே நல்லவர்கள் என்று மிதப்பில் இருந்த பலரும் மற்றவர்களின் கஷ்டத்தை கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள். ஆனால் சன்னியோ சில வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தையை தத்து எடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.

சன்னியின் பேட்டி: குழந்தையை தத்து எடுத்தது தொடர்பாக அவர் 'எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். மும்பையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு செல்வேன். அப்படி ஒருமுறை செல்லும்போது நிஷா என்ற பெண் குழந்தையை தத்து எடுத்தேன். எனது கணவரும் அதற்கு மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டார். இப்போது அந்தக் குழந்தை என்னுடைய வீட்டில் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் வளர்ந்துகொண்டிருக்கிறது. நிஷா வளர்ந்த பிறகு உன்னுடைய உண்மையான தாய் நான் இல்லை என்ற உண்மையையும் சொல்லிவிடுவேன்' என்று தெரிவித்திருந்தார்.
இரக்கமும், நேர்மையும்: பொதுவாக இந்திய சமூகத்தில் குழந்தைகளை தத்து எடுக்கும் பெரும்பாலானோர் சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் உண்மையை சொல்வதை பெரிய குற்றமாகவே பார்க்கிறார்கள். ஆனால் அந்த விஷயம் மற்றவர்களின் மூலம் அந்தக் குழந்தைகளுக்கு செல்வதைவிடவும், தத்து எடுத்தவர்கள் மூலமே செல்வதுதான் ஆரோக்கியமான ஒன்று. அந்தப் பக்குவம் இங்கு பலருக்கு இல்லை. ஆனால் சன்னி லியோனுக்கு இருக்கிறது.
அதேபோல், குழந்தைகள் வளர்ப்பு பற்றியும் அவர் ஆழமான புரிதலை கொண்டிருக்கிறார். ஒரு குழந்தை சிறந்த படிப்பாளியாக வருவதைவிடவும் நல்ல மனிதராக வளர வேண்டும். அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க தாய், தந்தையிடம்தான் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் முழுதாக உணர்ந்தவராகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தத் தெளிவையும், பக்குவத்தையும், நேர்மையையும், இரக்க குணத்தையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். நம் மீது சிறிய அளவில் ஏளன பார்வைகளும், இழி பேச்சுக்களும் விழுந்தாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் சன்னி சந்தித்ததோ அதற்கெல்லாம் உச்சம்தான். இருந்தாலும் அவரை பொறுத்தவரை தன்னுடைய பாதையில் தெளிவாக இருந்தார். மன உறுதியோடு இருந்து இன்று தன் மீது குத்தப்பட்ட அந்த மாதிரியான அடையாளங்களையும் மாற்றிக்காட்டியிருக்கும் சன்னி லியோனுக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











