டி.எஸ்.பாலையா அறிமுகம் செய்து வைத்த நம்மல் நிம்மல் பாஷை
Recommended Video
சென்னை: இன்றைய தமிழ் சினிமாவில் சேட்ஜிக்கள் பேசும் நம்மல், நிம்மல் என்ற வார்த்தை இவர் அறிமுகப்படுத்தியது தான். தூக்கு தூக்கி படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மள் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார். இந்தப்படத்திற்கு பின்னரே, இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும், நாடகங்களிலும் பேசப்பட்டது.
நம்ம சினிமாவிலே எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ். பாலையா என உலகமே இன்னிக்கும்வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள். அதிலும் எம்.ஆர்.ராதாவும், டி.எஸ்.பாலையாவும் வில்லன் மற்றும் நகைச்சுவை என இரண்டு கதாபாத்திரங்களிலும் கொடி கட்டி பறந்தவர்கள்

டி.எஸ்,பாலையா 1935ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் அறிமுகமான சதி லீலாவதி படத்தில் தான் அறிமுகமானர். அந்த படத்தில் ஏற்பட்ட நட்பினால் தான் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்கள் அனைத்திலுமே டி.எஸ்.பாலையாவையும் நடிக்க வைத்தார்.
அதுமட்டுமல்ல, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த கற்பகம் படத்தில், முதலில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தில் ரங்காராவ் நடித்த கதாபாத்திரத்தில் டி.எஸ்.பாலையாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர் இயக்குநர் கே.எஸ்,கோபாலகிருஷ்ணனிடம் சிபாரிசு செய்தார்.
ஆனால் அவரோ அதெல்லாம் முடியாது என்று சொன்னதால், அப்படியானல் நானும் அந்தப்படத்தில் நடிக்க முடியாது, நீங்கள் வேறு நடிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார். அந்த அளவுக்கு டி.எஸ்.பாலையா மீது எம்.ஜி.ஆர் மரியாதை கலந்த நட்பு வைத்திருந்தார்.
டி.எஸ்.பாலையா முதன் முதலில் கதாநாயகனாக நடித்த படம் வெறும் பேச்சல்ல. ஆனால், வில்லன் பாத்திரங்களும், நகைச்சுவை பாத்திரங்களுமே இவரைத் தேடி வந்தன. மணமகள் படத்தில் பத்மினிக்கு பாட்டு வாத்தியாராக வந்து, சின்னஞ்சிறு கிளியே பாடலை அழுதுக் கொண்டே பாடி..தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியில் அவர் அழுது அற்புதமாக நடிக்கும் காட்சியைப் பார்க்கும் போது நாம் இப்போதும் அடக்க முடியாமல் சிரிப்போம் என்பது நிஜம்.
அது மட்டுமல்ல, இன்றைய தமிழ் சினிமாவில் சேட்ஜிக்கள் பேசும் நம்மல், நிம்மல் என்ற வார்த்தை இவர் அறிமுகப்படுத்தியது தான். தூக்கு தூக்கி படத்தில் சேட்ஜியாக வந்து நம்மள், நிம்மள் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார். இந்தப்படத்திற்கு பின்னரே, இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும், நாடகங்களிலும் பேசப்பட்டது எனலாம்.
பின் வேலைக்காரி, மதுரை வீரன், புதுமைப்பித்தன், தாய்க்குப் பின் தாரம், அன்பு, காத்தவராயன் என பல படங்களிலும் அவர் நடித்தார். கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.மஹாலிங்கம், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
பாகப்பிரிவினை படத்தில் இவர் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட்டது. பாமா விஜயம் காமெடி தூள் கிளப்பி இருப்பார். அந்தப்படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா பாடல் இன்றைக்கும் ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களக்கு ஒரு நல்ல உதாரணம். இவரைப் பற்றி எழுதும் போது நம்மால் மறக்க முடியாத இரண்டு படங்கள். அவை காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வர கலைஞராக வந்து ரயிலில், சி.கே.சரஸ்வதியுடன் இவர் செய்யும் குறும்புகள் இப்பொழுது பார்த்தாலும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும். காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷிடம் இவர் கதை கேட்கும் காட்சி மாஸ்டர் பீஸ் ரகம். இன்றைய இயக்குநர்களுக்கும் ஒரு பாடம்.
திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராய் வந்து அலட்சியத்துடன் இவர் பாடும் ஒரு நாள் போதுமா இன்றும் பலரின் காதுகளில் ஒலித்தால் .பாலையா முகம் நினைவுக்கு வந்து விடும்.
அப்படியாப்பட்ட நடிகர் டி.எஸ்.பாலையா என்ற அற்புத நடிகர் 1976ஆம் ஆண்டில் காலமானார். எந்த ஒரு கலைஞனும் அவர்கள் வாழ்நாளில் போற்றப்படுவதில்லை. டி.எஸ்.பாலையாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதும் சோகம்தான்.


Click it and Unblock the Notifications