கோகைன்: அடிமையான நடிகர், நடிகைகள்!
ஹைதராபாத்: கோகைன் என்ற போதைப் பொருளை முதலில் சிறிது ருசி பார்த்து, பின்னர் அதற்கு அடிமையாகவே சில தென்னிந்திய நடிகர், நடிகைகள் மாறிவிட்டதாக போதை மருந்து கடத்தல் கும்பல் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தென்னிந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆந்திராவில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ் இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு 'கோகைன்' என்ற போதைப் பொருளை சப்ளை செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவரும் பிடிபட்டார்.
இவர்களிடம் ஆந்திரா போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல நடிகர், நடிகைகள் சிலர் இரவு நேர நடன அரங்குகளுக்கு வருவது வழக்கம். அவர்களிடம் நைஸாகப் பேசி போதை பழக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை போன்ற இடங்களில் உள்ள சில நடன அரங்கில் 'கோகைன்' போதைப் பொருளை தாராளமாக உபயோகிப்பார்களாம்.
இந்த நடன விடுதிகளுக்கு மும்பை மற்றும் சென்னையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அவர்களுக்கு போதைப் பொருளை ருசி பார்க்க வைத்து, அவற்றுக்கு அடிமை ஆக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த போதை மருந்து கட்டாயம் வேண்டும் என்று அந்த நடிகர் நடிகைகள் பிடிவாதம் பிடிப்பார்களாம். இதற்காக லட்சக்கணக்கில் செலழிக்கவும் தயங்குவதில்லையாம்.
நைஜீரிய இளைஞர் மற்றும் ரவி தேஜாவின் தம்பிகளிடம் விசாரித்ததில் பல முக்கிய நடிகர் நடிகைகளின் பெயர்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனராம்.
மேலும் நைஜீரிய, தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் மூலம் சில நடிகர்கள் 'கோகைன்' போதைப்பொருளை வாங்கி, விற்று அதில் வரும் பணத்தில் 40 சதவீதத்தை கமிஷனாகப் பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த கும்பல் ஒரு மாதத்திற்கு 50 கிலோ 'கோகைன்' போதைப் பொருளை மும்பைக்கும் அதன்பின் ஹைதராபாத்திற்கும் கடத்திக் கொண்டு வந்து விற்றுள்ளனர். ஒரு கிராம் கோகைன் விலை ரூ 3000 வரை விற்கப்படுகிறதாம்.
தென் அமெரிக்காவின் பொலிவியாவில்தான் இந்த கோகைன் அதிகம் தயாராகிறது. அங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு ஆசிய நாடுகளுக்கு சப்லை செய்யப்படுகிறது. ஹைதராபாத் நகரில் மட்டும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு இந்த கும்பல் வியாபாரம் செய்துள்ளது.
ஹைதராபாத் நகரில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் இடங்களில் போலீசார் முற்றுகையிட்டு நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் விசா முடிந்தும் நாடு திரும்பாமல், இந்த போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











