ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?

'India against corruption' என்ற முழக்கம் மாநிலம், மொழிகள், இனங்கள் போன்ற அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முழுக்க எதிரொலித்தது. அனைத்துத் துறை சார்ந்தவர்களும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கத் தவறவில்லை.
குறிப்பாக இளைஞர்கள் அத்தனை துடிப்புடனும் ஆர்வத்துடனும் அந்த முதியவருடன் தோளொடு தோள் நிற்க ஓடி வந்தனர்.
பாலிவுட் எனப்படும் மும்பை திரையுலகமே ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓடிவந்தது. அமிதாப், ஆமீர்கான், ஷாரூக்கான், அனுபம்கெர், விவேக் ஓபராய், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு.... இப்படி ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்கள்.
ஆனால் தென்னிந்தியாவின் முக்கிய கவன ஈர்ப்பாகத் திகழும் தமிழ்த் திரையுலகம் மட்டும் கப் சிப்பென்று இருந்தது இந்த 5 நாட்களும். சூப்பர் ஸ்டார் தொடங்கி சுள்ளான் ஸ்டார்கள் வரை யாரும் இதுகுறித்துப் பேசவே இல்லை.
குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள், தங்கள் தலைவர் தேர்தலுக்கு வாய்ஸ் தராவிட்டாலும், ஹஸாரேவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனக்கு அரசியல் வேண்டாம், சாதி வேண்டாம், சாமியும் வேண்டாம், குடிமகனாக நின்று அரசியலை சுத்தப்படுத்த முடியும் என்று மேடை தோறும் பேசி வரும் கமல்ஹாஸனும் கூட அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சரி, அப்படிக் குரல் கொடுத்தால் அரசியலாகிவிடுமோ என இவர்கள்தான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்... ஊழலுக்கு எதிரான கட்சி என்று பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்ளும் விஜயகாந்த் என்ன செய்து கொண்டிருந்தார்? நாளொரு வேண்டாத பரபரப்புகளை பிரச்சாரத்தில் கிளப்பிக் கொண்டிருந்தாரே தவிர, ஹஸாரேவுக்கு மறந்தும் கூட குரல் கொடுக்க முன்வரவில்லை.
சரி... புதிதாக கட்சி தொடங்குவேன், ஆட்சியைப் பிடிப்பேன் எனக் கூறிவரும் இளம் நடிகரான விஜய், அரசியலில் குதிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத், காற்றில் பஞ்ச் டயலாக் அடிக்கும் அசகாய சூரர்கள் தனுஷ், சிம்பு, ஓங்கிடிச்சா ஒன்றரை டன் எடை என்று சினிமாவில் வீரம் பேசும் சூர்யா, நான்கு படங்களில் நடித்து முடிப்பதற்குள் 100 பேரை அடிக்கும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட கார்த்தி... சீஸனுக்கு சீஸன் நிறம் மாறும் சத்யராஜ்.... ம்ஹூம்.. ஒருவரும் ஊழலுக்கு எதிராக ஒரு சின்ன அசைவைக் கூட காட்டவில்லை.
'இதானா இந்த அட்டைக் கத்திகளின் நேர்மையும் வீரமும்' என நக்கலாய்ச் சிரிக்கிறது, ஊழலை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட தமிழகம்!


Click it and Unblock the Notifications











