twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் ஃபெட்னா தமிழ் விழாவை அதிர வைத்த பறை இசை!

    By Shankar
    |

    செயின்ட் லூயிஸ் (மிசௌரி, யுஎஸ்): 2014-ம் ஆண்டு ஃபெட்னா விழாவில் தமிழரின் கலாச்சார அடையாளமான பறை இசை நிகழ்ச்சி களைகட்டியது. வந்திருந்த பார்வையாளர்களை மயிர்க்கூச்செரியும்படி அமைந்தது இந்த பறை இசை நடன நிகழ்ச்சி.

    2014, ஜூலை 4, 5 தேதிகளில் செயிண்ட் லூயிஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27ஆம் ஆண்டு தமிழ்விழா நடந்ததது.

    வடஅமெரிக்க தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழைக் கொண்டாடிய இந்த இரு தினங்களும், நண்பர்கள் அனைவரும் உற்றார்களாகவும், உறவினர்களாகவும் மாறிய நாட்களாக மாறிப் போயின என்றால் மிகையல்ல. நகரின் பிரதான சாலைகளில் பாரம்பரிய உடையில் தமிழர்கள். செயின்ட் லூயிஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு தமிழால் மணத்தது.

    'தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம்' என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி இரு தினங்களும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைப்பெற்றதுதான், தமிழனின் கலாச்சார அடையாளமான பறை நிகழ்ச்சி.

    அமெரிக்க பறைக் குழு

    அமெரிக்க பறைக் குழு

    சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சியை ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்தவர்களை ஆரவாரத்துடன் ஆட வைத்தது அமெரிக்க பறை இசைக் குழு. தமிழ் கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த பறைக் குழு. இரண்டு ஆண்டுகள் பயிற்சியில் இப்போது தேர்ந்த குழுவாக மாறியுள்ளது. பல அமெரிக்க ஊர்களில் இவர்களின் பறையாட்டம் அரங்கேறியிருந்தாலும், பேரவை நிகழ்ச்சி கிரீடம் வைத்தாற்ப்போல் அமைந்தது.

    தேர்ந்த கலைஞர்கள்

    தேர்ந்த கலைஞர்கள்

    பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி அல்லது பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், அதற்கு தாய்த் தமிழகத்திலிருந்து கலைஞர்களை வரவழைக்க வேண்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, பறை இசை நடன நிகழ்ச்சி நடத்துவதில், தேர்ந்த கலைஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொற்செழியன் மற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக நின்ற பேரவையின் தலைவர் தண்டபாணி குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்.

    பறை இசை கலைஞர்கள்

    பறை இசை கலைஞர்கள்

    இந்த பறை நடனக் குழுவில், பொற்செழியன், ரமேஷ், கோவிந்தராஜ், அசோக், நந்தகுமார், பாலா, தினேஷ், பிருத்விராஜ் , யசோதா, ரம்யா, கவிதா, புவனா,வீணா, ஜெயஸ்ரீ ஆகியோரும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வலர்களாக ஆதிசரண், கனிஷ்க், ஜோதம்,ரியா, ரித்தன்யா ஆகிய சிறார்களும் இதில் மனமகிழ்வுடன் பறையாடினர்.

    பெரும் வெற்றி

    பெரும் வெற்றி

    தமிழ் கலைகளைக் காக்கும் பொருட்டு இக்குழுவினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. குறிப்பாக 2014 ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியில் முக்கியப் பங்கு பறை இசை நடனம் மற்றும் தமிழரின் தொன்மை கலைகளான தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக் கூத்து போன்றவற்றுக்கும் உண்டு.

    அமெரிக்க பேராசிரியர்கள்

    அமெரிக்க பேராசிரியர்கள்

    இதில் பெருமைப்பட வேண்டியது, ஒக்கலஹாமா பல்கலைகழகத்தின் இசைப் பேராசிரியர் ஜோயி செரினியன் மற்றும் ஏரன் பேகி தமிழ் பறை நடனக் குழுவினருடன் இணைந்து சிறப்பித்ததுதான். அவர்களுடைய பறை பட்டறையும் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கியது. ஆம்... நம் தமிழரின் பறை இசையை மையமாக வைத்து அமெரிக்கர்கள் பறைப் பட்டறை நடத்துவதை தாயகத் தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    பறையால் விண்ணதிரட்டும்

    பறையால் விண்ணதிரட்டும்

    இசை மனதை மகிழ்வூட்டும், அமைதியாக்கும், ஆவாரப்படுத்தும், சுத்தமாக்கும். நம் முன்னோர்கள் கண்ட பறை, அமெரிக்கன் தமிழ் பறை குழுவின் மூலம் புது பரிமாணத்தை அடைந்துள்ளது. அவர்களின் முயற்சி தமிழரின் பறையை விண்ணை முட்டச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

    தொடர்பு கொள்ளலாம்

    தொடர்பு கொள்ளலாம்

    அமெரிக்கன் தமிழ் பறை குழுவினர், பறை உலகறிய செய்வதற்கு என்றும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. இக்கலையை கற்றுக்கொள்வதற்கோ, மேடையில் கண்டு ரசிக்கவோ அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றனர்.

    தொடர்புகளுக்கு: http://fetna.org/index.php/2014/feedback

    English summary
    Parai music, the cultural identity of Tamils has been performed by trained Tamil activists in Fetna 2014 at St Louis, Missouri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X