சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

By Shankar

இன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்கள் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, படத்தி வாங்கியவர்கள் லாபம் அடைந்தார்களோ இல்லையோ அது பற்றியெல்லாம் கவலையில்லை. தங்களுக்குள் யார் சூப்பர் ஸ்டார் என்பதில் மறைமுக யுத்தம் நட்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அந்த பட்டத்திற்கு உரியவரான ரஜினிகாந்த் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர் இடத்திற்கு இன்னொருவரை பட்டம் சூட்ட நினைப்பது கோமாளித் தனமானது. புரட்சித் தலைவர், நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற அடை மொழிகளெல்லாம் மககள் அன்போடு கொடுத்த பாசப் பட்டங்கள். அந்த இடத்திற்கு இன்னொருவரை நினைத்துப் பார்ப்பதென்பது அவர்களின் உழைப்பின் மீது உமிழ்வது போன்றது.

There is only one Superstar, he is Mr Rajinikanth!

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு.

75 ல் ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட் சினிமாவில் நுழையும் காட்சியே தீர்க்க தரிசனமான காட்சி "நான் பைரவி புருஷன் வந்திருக்கேன்" என்று கேட்டை திறக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் திறந்து கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்து விட்டார். ஆனால் அது துக்கடா கேரக்டர். அப்படிதானே அவர் அறிமுகமாக முடியும். முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க அவர் அப்பா ஒன்றும் சினிமா டைரக்டர் இல்லையே.

அதன் பிறகு சினிமாவில் ரஜினி காட்டிய ஸ்டைலும் கொட்டிய உழைப்பும் மிருக்கதனமானது என்பதற்கு சில சாட்சிகள்.....

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக கோலோச்சிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மத்தியில் நாம் எப்படி இங்கு நம்மை தக்கவைத்துக் கொள்வது என்கிற பெரும் குழப்பத்துடன் தான் கால வைத்தார் ரஜினி. அதற்காக நடிப்பிலும், உழைப்பிலும் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு காட்ட வேண்டுமோ அப்படியொரு அர்ப்பணிப்பை காட்டினார் ரஜினி. 75 லிருந்து 78 வரை எத்தனை எத்தனை வேடங்கள். பல படங்களில் வில்லனாக, தப்புத்தாளங்களில் விபச்சாரியின் கணவனாக, புவனா ஒரு கேள்வி குறி படத்தில் கைவிடப்பட்டவளுக்கு வாழ்வு கொடுப்பவனாக, அவர்கள் படத்தில் கொடுமைக்கார கணவனாக, மூன்று முடிச்சு படத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனாக இப்படி யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பில் ஜொலித்தவர்.

பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் பரட்டையனாக வரும் ரஜினி முகத்தில் காரி துப்புவதுபோல் வரும் காட்சியில் பாரதிராஜா சோப்பு நுரையை தெளித்து காட்சியை எடுத்து விடலாம் என்றபோது ரஜினிதான் "இல்லை...இல்லை காட்சி தத்துரூபமாக வராது" என்று சொல்ல, ஸ்ரீதேவி அப்படி செய்ய மறுத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் ரஜினி முகத்தில் நிஜமாக எச்சிலை துப்பவைத்து அந்த காட்சியை படமாக்கினார் இயக்குனர் பாரதிராஜா. இப்போது இருக்கும் ஹீரோக்கள் போல கோட் சூட்டும், சிலிக்கான் லைட்டும், அழகிகள் சூழ ஆடும் பாட்டுமாக நடித்து வந்தவரில்லை. கேரவேன்களுக்குள் புகுந்து கொண்டு தன் கேரக்டரை வளர்த்தவரும் அல்ல. நடிக்க வரும் முதல் படத்திலேயே கேமராவை காலுக்கு கீழே வைத்து ( லோ ஆங்கிள் ) ஸ்கிரீனை பார்த்து பஞ்ச் டயலாக் பேசியவர் கிடையாது ரஜினி.

ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்றுக்கொண்ட கேரக்டர்கள் எல்லாவற்றுக்கும் தன் தனித்த நடிப்பால் அப்ளாஸை வாங்கிக்கொடுத்தார்.. ஒரே வருடத்தில் மட்டும் தயாரிப்பாளர்களின் சிரமத்தை போக்க தொடர்ந்து நடித்து 24 படங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். இரவு பகல் பாரமல் நடித்துக் கொடுத்து தன் ஆரோக்கியம் பாதிக்க அவரே காரணமானார். தூக்கம் வந்து சூட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்று ரஜினி செய்த காரியங்கள் யாரும் செய்யத்துணியாதவை. அதில் ஒன்று இரவு படப்பிடிப்பு முடிந்து நான்கு மணிக்கு வந்து படுக்கும் அவர் தன் உதவியாளர்களுக்கு சொல்லி வைத்த உத்தரவுபடி ஆறு மணிக்கெல்லாம் அவர் முகத்தில் ஐஸ் வாட்டரை கொட்டி அவரை எழுப்புவார்களாம்.

இப்படி மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகே 77 - 78 ல் தாணுவின் பைரவி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தாணு ரஜினியின் தனித்தன்மையை உணர்ந்து பட போஸ்டரில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினி நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்ய முடிவு செய்கிறார். இது ரஜினிக்கு எப்படியோ தெரிந்து பதறிப்போய் தாணுவின் அலுவலகத்திற்கு வருகிறார். "தாணு சார் பெரியங்க எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்கள்லாம் இருக்கும்போது நமக்கு எதுக்கு இந்த பட்டமெல்லாம். அவங்களை நாம் வருத்தப்பட வைக்கூடாது" என்று பெருந்தன்மையோடு மறுத்திருக்கிறார். ஆனால் தாணு அவர்கள் பிடிவாதமாக "மெகா சூப்பர் ஸ்டார் என்று போட்டுவிடவா" என்று கேட்க, "ஐயோ சூப்பர் ஸடாரே பரவாயில்ல" என்று ரஜினி மறுக்க, மறுநாள் ஒரு நாளிதழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு பைரவி பட விளம்பரம் முழு பக்கத்தில் வெளிவருகிறது. தர்ம சங்கடத்தில் தவித்தார் ரஜினி.

அவர் நடித்த பதினெட்டு படங்கள் இருநூறு நாட்கள் ஓடிய படங்கள் 38 படங்கள் நூறு நாள் படங்கள், நான்கு படங்கள் ஒருவருடத்திற்கும் மேல் ஓடிய படங்கள். இப்படி வாங்கிய பட்டத்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டார் ரஜினி. இத்தனை படங்களில் சில படங்களில் தன்னை வைத்து படமெடுத்து நலிந்து போன தயாரிப்பாளர்களை பங்குதாரராக ஆக்கிக்கொண்டு அவர்களுக்கு வாழ்வளித்தார். எந்த தயாரிப்பாளரும் 'உங்கள் படங்களால் எங்களுக்கு பெரிய நஷ்டம்' என்று அவர் வீட்டின் முன் நின்றதில்லை.

பட்டத்திற்கு ஆசைப்படும் இன்றைய ஹீரோக்கள் இப்படி தொடர் வெற்றி கொடுத்திருக்கிறார்களா என்பதை அவர்களே சொல்லட்டும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பங்கு போட்டுக்கொள்ள அது என்ன 'பாலகாடு பேக்கரி'யில் விற்கும் பன்னா.

ரஜினியின் பலவருட உழைப்பு. இந்த உழைப்பிற்கு நாம் எந்த வகையிலும் தகுதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். சினிமாவில் மட்டுமல்ல..தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதும் ரஜினியை மக்கள் நேசிப்பதற்கு முக்கிய காரணம். அதோடு தான் நேசிக்கும் சினிமாவை வைத்து எந்த விதமான அரசியல் ஆதாயத்தையும் அடைய அவர் முயன்றதில்லை. ஆனால் இன்று சினிமாவில் உள்ள நடிகர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

ஒரு நடிகர் வீட்டில் நடந்த சம்வத்தை சொன்னால் ரஜினிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணரலாம். அவர் பங்களாவில் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்கள். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள். காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணில் படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார். வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம். சரி இந்த கட்டிட வேலை எதற்காக நடந்தது தெரியுமா... அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் தங்களின் அபிமான நடிகர் வீடு இதுதான் என்று பாசத்தோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது தெரிந்து தன் வீட்டின் காம்பவுண்ட் சுற்றுச்சுவரை பல அடிகள் உயர்த்திக் கட்ட போட்ட உத்தரவால் நடந்த வேலை!!

ஆனால் ரஜினியின் அசாத்திய பாசம் எவருக்கும் வராது. காமராஜர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி முடிந்து விட்டு காரில் அவர் வெளியேற, தொலைவில் சாலையில் தனியாக நின்றிருந்த இருவர் ரஜினியின் கார் என்பதை பார்த்து விட்டு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருப்பது தெரிந்தும் உற்சாகத்தில் கையை ஆட்ட பைக்கில் துரத்துகிறார்கள். உடனே ரஜினியின் கார் வேகம் குறைய, அந்த இரண்டு பேருக்காக கண்ணாடியை இறக்கி புன்னகைத்து கையை அசைத்து, 'இப்படி வேகமா வரவேணாம்... நிதானமா போங்க' என்று சொல்லிச் செல்கிறார். அந்த பாசத்தை யாரும் சொல்லித் தந்து வரவழைக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறியது. அதனாலதான் அவர் சூப்பர் ஸ்டார்.

எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பட்டங்களை கொடுத்தது யார் தெரியுமா சாதாரண ரசிகர் ஒருவர்தான். பத்திரிகைகள் அல்ல. திமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஒருநாள் சத்யா ஸ்டுடியோவில் அதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர். வெளியே ரசிகர்கள் கூட்டம் உணர்ச்சி பொங்க கூடியிருந்தது. எம்.ஜி.ஆர் வெளியே வந்து தலைகாட்ட அத்தனை பேரும் ஆர்ப்பரித்தனர். அதில் கூட்டத்திலிருந்த வேலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் பரவசத்தில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க" என்று குரல் கொடுக்க, அன்றிலிருந்து கட்சித் தலைவர் புரட்சித்தலைவர் ஆனார்.

சிவாஜிக்கு அன்று வந்த சினிமா பத்திரிகையான 'பொம்மை'யில் வந்த கேள்வி பதிலில் சிவாஜி ரசிகர் ஒருவர் 'எங்கள் நடிகர் திலகம் எப்படியிருக்கிறார்' என்று ஒரு கேள்வியை வைக்க, சிவாஜியும் அந்த அன்பு பரிசை அப்படியே ஏற்றுக்கொண்டார்.

இதை அப்படியே அடுத்த புரட்சித் தலைவர் யார் என்றோ, அடுத்த நடிகர் திலகம் யார் என்றோ போட்டி வைத்தால் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கும். ஒரே ஒரு இமயமலை, ஒரே ஒரு வங்கக் கடல் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினி காந்த் என்கிற மாமனிதன் தான்.

பட்டம் என்பது மக்கள் பரிசாக கொடுப்பது யாரிடமிருந்தும் பறித்துக் கொடுப்பது இல்லை. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தால் போதும்!

-தேனி கண்ணன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X