விருதுடன் திரும்பிய ரஹ்மானுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார் ரஹ்மான். இந்தியர் ஒருவருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த சாதனையுடன் ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இதையடுத்து விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரஹ்மானை அவர்கள் நாதஸ்வரம், மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து வீடு வரை ரசிகர்கள் ரஹ்மானின் காரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வீடு கொண்டு போய் சேர்த்தனர்.
ரசிகர்களின் இந்த பிரமாண்ட வரவேற்பினால் உற்சாகமடைந்தார் ரஹ்மான். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
இந்தியாவையும், அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படம் ஸ்லம்டாக் மில்லனர். சாதாரண குடும்பத்துப் பின்னணி கொண்ட எனக்கு இப்படி ஒரு மிகப் பெரிய கெளரவம் கிடைத்திருப்பது பெரும் உந்துதலாக உள்ளது என்றார் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











