Maamannan: சமூக நீதியை ஓங்கிப் பேசிய மாமன்னன் வெளியாகி ஒருவருசம் ஆச்சா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் சொற்பமான இயக்குநர்கள் மட்டுமே தங்களது படங்கள் மூலம் சமூக நீதி கருத்துக்களை பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இயக்குநர் ரஞ்சித்தின் முதல் தயாரிப்பு படமான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், சென்னை திரைப்பட திருவிழா, கோவா திரைப்படத் திருவிழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது.
மேலும் படம் வெளியானபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் இந்த படத்தினை பாராட்டினர். படத்திற்கு பல்வேறு ஊடகங்கள் விருது வழங்கி கௌரவித்தது. இதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டே இந்த படம் வெற்றிப் படமானது. இதனால் மாரி செல்வராஜ் கவனம் பெறும் இயக்குநராக அறியப்பட்டார். அதன் பின்னர் கர்ணன் என்ற தனது இரண்டாவது படமும் அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

தனது மூன்றாவது படமான மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி வெளியாகியது. இன்றுடன் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகின்றது. படம் வெளியானபோது படத்தின் கதை முழுக்க முழுக்க அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை வைத்துதான் எடுக்கப்பட்டது என கூறப்பட்டது. மேலும் வில்லனாக நடித்த ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
யுகபாரதி: படம் முழுவதும் சமூக நீதியை உரக்கப்பேசிய படமாக காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததால் முற்போக்குவாதிகளிடம் இப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை அமைத்திருந்தார். குறிப்பாக விண்ணிலே பாய்கிறேன் என்ற வார்த்தை எழுதியதற்கு ரகுமானுடன் பணியாற்றியதை மைய்யப்படுத்திதான் எழுதினேன் எனக் கூறினார்.

மாமன்னன்: படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். வடிவேலு இந்த படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. படத்தில் இடம் பெற்ற பன்றிக் குட்டி காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறந்தது.
படம் ஓ.டி.டி தளத்தில் வெளியான பின்னர் வில்லன் கதாபாத்திரத்தின் காட்சிகளை தனியாக எடுத்து சமூகவலைதளங்களில் ரசனையான பாடல்களைப் பதிவிட்டும் சாதிய பெருமையைப் பேசும் பாடல்களைச் சேர்த்தும் பதிவிட்டு வந்தனர். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படம் கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடியில் இருந்து 30 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











