நடிகரின் கண்ணீர் கதை: பாரதிராஜாவால் அறிமுகமான ஹீரோ.. அனாதையாக இறந்து கிடந்த விஜயனின் கண்ணீர் கதை!
சென்னை: 80 காலகட்டத்தில் தமிழ் சினிமா இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மாய வலையில் தான் இருந்தது. பாரதிராஜா யாரை அறிமுகம் செய்து வைக்கிறாரோ அவர்கள், புகழின் உச்சியை அடைவார்கள் என்கின்ற எண்ணம் அப்போது பலருக்கும் இருந்தது. அது நடிகையானாலும் சரி, நடிகரானாலும் சரி பாரதிராஜா அறிமுகம் செய்துவிட்டால், அவர் சினிமாவில் உச்சம் தொட்டு விடுவார். அப்படி உச்சம் தொட்ட நடிகர் விஜயன் தான் தனது குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்தார். இந்த செய்தியில் அவரின் கண்ணீர் கதையை பார்க்கலாம்.,
பாரதி ராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் பட்டாளத்தான் கதாபாத்திரத்தில், அறிமுகமானவர் தான் நடிகர் விஜயன். அந்தப் படத்திற்கு பிறகும் பாரதிராஜா விஜயனை விடவேவில்லை, பல திரைப்படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை அவருக்கு கொடுத்தார். நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தில் விஜயனுக்கு மாறுபட்ட கதாநாயகன் கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார் பாரதிராஜா. அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயன் டாப் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

நடிகர் விஜயன்: அந்த நேரத்தில் தான் இயக்குநர் மகேந்திரன், தமிழ் சினிமாவில் தனக்கு என தனி இடத்தை உருவாக்கினார். அவர் இயக்கிய 'முள்ளும் மலரும்' திரைப்படம் மகேந்திரனை தமிழ் சினிமா ரசிகர் மனதில் தனி இடத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தில் விஜயன், ஒரு மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அலட்டிக் கொள்ளாமல், அதிர்ந்து பேசாமல், மெடுக்காக வந்து தனது வில்லத்னத்தை பிரதிபலித்தார் விஜயன். இந்த படத்தை பார்த்த பெண்கள் பலர், இப்படி ஒரு கொடூரமான மனுஷனா என விஜயனை திட்டித்தீர்த்தார்கள்.
இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
திறமையான நடிகர்: உதிரிப்பூக்கள் திரைப்படத்திற்கு பிறகு, பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள், மண் வாசனை, கண்ணீர் பூக்கள் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இந்த காலத்து இளசுகளுக்கு விஜயனை '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் கதிரின் அப்பாவாகவும், ரமணா படத்தில் முரட்டுத்தனமாக வில்லனாகவும் தான் தெரியும். இப்படி கொடி கட்டி பறந்த விஜயன், இளையராஜாவின் இசையில் 'புதிய ஸ்வரங்கள்' என்ற படத்தை இயக்கினார். ஆனால், பொருளாதார சிக்கல் காரணமாக அந்த படம் வெளிவராமல் போனதால், மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட விஜயன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
அனாதையாக இறந்து கிடந்தார்: கேரளாவில் உறவினர்கள், மனைவி, குழந்தைகள் என அனைவரும் இருந்தும், உறவுகளை மறந்து போகும் அளவிற்கு இவரின் குடிப்பழக்கம் இவரை மாற்றியது. இதனால், ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியை விவாகரத்து செய்தார். குடிப்பழக்கம் விஜயன் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் விஜயனுக்கு பட வாய்ப்பு குறைந்து போனதால், யாருமே இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து காலத்தை கடத்தி வந்தார் விஜயன். கவனிக்கவும் ஆள் இல்லை, உணவுக்கும் வழியில்லாமல் சதா குடித்துக் கொண்டே இருந்த நடிகர் விஜயன், திடீரென ஒரு நாள் யாருமே இல்லாத அறையில் அனாதையாக இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரின் உடல் கேரளாவில் உள்ள அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. எப்போர்பட்டவராக இருந்தாலும், தவறான பழக்க வழக்கம் இருந்தால், கடைசியில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நடிகர் விஜயன் ஒரு உதாரணம்.


Click it and Unblock the Notifications











