ஓடும் ரயிலை இரவு 11.30 மணிக்கு நிறுத்திய விஜயகாந்த்... சூர்யா & விவேக் சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் உணவு உபசரிப்பு அனைவரும் அறிந்ததே. ஷூட்டிங்கில் உணவு இடைவேளை வரும்போது முதலில் அனைவரும் சாப்பிடுகிறார்களா, தனக்கு ஆர்டர் செய்துள்ள அனைத்தும் அனைவருக்கும் இருக்கிறதா என்று பார்த்த பின்னர்தான் அவர் சாப்பிடச் செல்வாராம்.
இளநீர், சிக்கன், மட்டம், சூப், ஜூஸ் என்று அவர் என்ன சாப்பிடுகிறாரோ அது ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.
அப்படி தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யாவிட்டால், தன் சம்பள பணத்தை பிடித்துக் கொண்டு அதில் அந்த ஏற்பாடுகளை செய்யச் சொல்வாராம்.

தினமும் விருந்து
விஜயகாந்த ஆஃபீஸுக்கு யாரேனும் சென்றால், முதலில் கேட்கப்படும் கேள்வி 'சாப்டீங்களா?' என்பதுதானாம். சினிமா துறையில் இன்று வெற்றி இயக்குநர்களாக இருக்கும் பலரும் ஒரு காலத்தில் துணை இயக்குநர்களாக சிரமப்பட்ட போது, விஜயகாந்த் அலுவலகத்தில்தான் சாப்பிடுவார்கள் என்று பலரும் கூறியிருக்கின்றனர்.

கலை நிகழ்ச்சிகள்
நட்டத்தில் இருந்த நடிகர் சங்கத்தை, தான் தலைவர் ஆன பின்பு கடன்களை அடைத்து லாபத்தையும் ஈட்டித் தந்தவர் விஜயகாந்த். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட யுக்தி கலை நிகழ்ச்சிகள். சங்கத்திற்காக மட்டுமின்றி கார்கில் போர் சமயம் கூட நிவாரண நிதி திரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். அப்படி ஒரு சமயம் மதுரையில் கலை நிகழ்ச்சி முடிந்த பின்னர், நடிகர்களுக்கு என்றே தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் அனைத்து நடிகர்களையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

ரயில் பயணம்
அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சொதப்பலால் யாரும் சரியாக சப்பிடவில்லை என்பதை அறிந்த விஜயகாந்த் ஒரு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தியுள்ளார். செல்ஃபோன் இல்லாத அந்தக் காலக்கட்டத்திலும் இரவு 11.30 மணிக்கு ஒரு கிரமத்தில் இருந்த ரயில் நிலையத்திற்கு அந்த ஊரில் இருந்த அனைத்து ஹோட்டல்காரர்களையும் வர வைத்து அங்கேயே பஃபே சிஸ்டம் மூலம் அனைவரையும் சாப்பிட வைத்துள்ளார் விஜயகாந்த். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு,"ஏதோ கார நிப்பாட்ற மாதிரி ஒரு ரயிலையே நிறுத்தி எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செஞ்சாரு. அவர் நெனச்சா நடக்காத விசயங்களே இல்லங்குற மாதிரி தோனுச்சு" என்று நடிகர் சூர்யாவும்."காலம் அறிந்து உடனே செயல்படக் கூடிய நல்ல மனிதர், நல்ல தலைவர்" என்று முன்னர் ஒருமுறை நடிகர் விவேக்கும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தொடரும் விருந்தோம்பல்
ஒரு முறை அவரது அலவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது, மட்டன் விருந்து வைத்துள்ளனர். அப்போது, 12 நபர்களுக்கு மட்டும் கறி தீர்ந்துவிட்டது என்று கூறி வெறும் குழம்பை ஊற்றியுள்ளார்கள். இது எப்படியோ விஜயகாந்த் காதிற்கு போகவே, தனது மேனேஜரை அறைந்துவிட்டு உடனே அவர்களுக்கு மட்டன் கறி வரும்படி ஏற்பாடு செய்தார் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவரின் அலுவலகத்தில் இன்னும் அந்த விருந்தோம்பல் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











