20 வருடங்களை நிறைவு செய்த விஷால்.. யப்பா எவ்வளவு பிரச்னைகள்?.. அத்தனையும் தாண்டி நிற்கிறாரே
சென்னை: நடிகர் விஷால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்களில் மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் ரத்னம் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படும் சூழலில் அவர் சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது.
தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். தந்தை போலவே சினிமாவில் ஆர்வம் உடைய அவருக்கு அர்ஜுனிடம் உதவி இயக்குநராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி 2001ஆம் ஆண்டு வெளியான வேதம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் அவருக்கு காலமும், சினிமாவும் வேறு கணக்கு போட்டு வைத்திருந்தன. அந்த கணக்கின் அடிப்படையில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

பக்கா ஆக்ஷன் ஹீரோ: முதல் படத்தில் சாந்தமாகவும், ஆக்ஷன் மோடிலும் தோன்றிய விஷால்; கண்டிப்பாக பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவதற்கான அத்தனை சமிக்ஞைகளும் அந்தப் படத்தில் தெரிந்தன. அப்படித்தான் காலம் செல்ல செல்ல நடந்தது. முக்கியமாக இரண்டாவது படமான சண்டக்கோழி படத்திலேயே முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துவிட்டார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகும் அவர் நடித்த திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி படங்களும் சூப்பர் ஹிட்டடிக்க கூடிய விரைவிலேயே டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார்.
சறுக்கிய விஷால்: டாப் கியரில் போய்க்கொண்டிருந்த விஷாலுக்கு இடையில் சில படங்கள் சறுக்கின. சின்ன சறுக்கல்தான் என்று அவரும், அவரது ரசிகர்களும் நினைத்துக்கொண்டிருந்தால் அந்த சறுக்கல் சாதாரணமானது இல்லை என்பதை காலம் உணர்த்தியது. இதற்கிடையே பாலா இயக்கத்தில் விஷால் நடித்த அவன் இவன் படத்தில் ஃபெர்பார்மன்ஸ் கொண்டாடப்பட்டாலும் நினைத்த அங்கீகாரம் விஷாலுக்கு கிடைக்கவில்லை. இடையில் சில வருடங்கள் ஹிட்டே கொடுக்காமல் இருந்த விஷால் பாண்டிய நாடு படத்தில் ஹிட் கொடுத்தார். ஆனால் அதையும் தக்க வைக்க முடியாமல் அடுத்தடுத்த படங்களில் தோல்விகளை பார்த்தார்.
சர்ச்சை: இப்படி ஒருபக்கம் படங்கள் சில சறுக்கல்களை சந்திக்க சர்ச்சைகளும் விஷாலை சந்தித்தன. முக்கியமாக நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோரை எதிர்த்து நின்றார். அதனால் அந்த அணியினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். முக்கியமாக அந்த விஷயத்தால்தான் விஷால் - வரலட்சுமியின் காதல் முறிந்ததாகவும் ஒரு சர்ச்சையும், பேச்சும் அந்த சமயத்தில் எழுந்தது உண்டு. அந்த சர்ச்சை மட்டுமின்றி திடீரென ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை கிளப்பினார்.
ஸ்ரீரெட்டி விவகாரம்: அதனையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி விஷால் குறித்து பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கினார். முக்கியமாக அவர் விஷால் குறித்து சொன்ன வார்த்தை பெரும் பேசுபொருளானது. அந்த வார்த்தையையே மார்க் ஆண்டனி படத்தில் பயன்படுத்தியிருந்ததன் மூலம் அதனை பெரிதாக விஷால் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம். இன்னமும்கூட விஷாலை சுற்றி ஸ்ரீரெட்டி விவகாரம் பாம்பு போல் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.
மிஷ்கின் vs விஷால்: ஸ்ரீரெட்டி விவகாரம் எப்படி விஷாலின் திரை வாழ்க்கையில் பெரிய சர்ச்சையோ அதேபோல்தான் மிஷ்கின் விவகாரமும். துப்பறிவாளன் படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டு இருவரும் துப்பறிவாளன் 2வுக்கு இணைய அதில் சில விஷயங்கள் நடக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. மேலும் தனது தம்பியை விஷால் அடித்துவிட்டார் என்றும்; தாயை குறித்து தவறாக பேசினார் என்றும் சொல்லி மேடையிலேயே விஷாலை திட்டினார். இப்போது துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கிவருகிறார்.
இப்படி பல சர்ச்சைகளையும், சண்டைகளையும் சந்தித்தவர் விஷால். ஆனாலும் இன்னமும் மனம் தளராமல் தனக்கு தோன்றியதை செய்துகொண்டும், சில விஷயங்களை பேசிக்கொண்டும்தான் இருக்கிறார். அதற்கு தனி மன தைரியம் வேண்டும். ஜப்பான் பட விழாவில் நடிகர் கார்த்தி விஷாலை பார்த்து, 'விஷால் என்னைக்கு என்ன பிரச்னையோடு வந்து நிற்பார் என்றே தெரியாது. பல பிரச்னைகளை சமாளித்துக்கொண்டிருக்கிறார்' என்று. அப்படி பல பிரச்னைகளை சந்தித்தும், கடந்தும் இன்னமும் சினிமாவில் நின்றுகொண்டிருக்கும் விஷாலுக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











