அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்...இயக்குநர் சங்கருக்கு அடுத்து நடந்த சம்பவம் என்ன?
சென்னை: இயக்குநர் சங்கர் அவர்களிடம் பாடல் எழுதுவது ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி செல்லும் அனுபவத்தைப் போன்றது என்று சிவாஜி பட இசை வெளியீட்டில் பாடலாசிரியர் பா.விஜய் கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு சங்கர் தனது பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவருடைய படங்கள் அனைத்திலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
பாடல்களுக்காக அவர் செலவிடும் பணத்தை வைத்து ஒரு படமே எடுத்துவிடலாம் என்று கூறுவர். பாடல்களின் மூலமாகத்தான் அவர் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்பட்டார்.

காதலன்
ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருந்தார் வாலி. காதலன் படத்திலும் ஒரு பாடலை எழுத வாலியை அனுகியுள்ளார் சங்கர். அவர் எழுதிய முக்காலா முக்காபுலா பாடல் அதனை பாடிய மனோ, ஆடிய பிரபுதேவா, படமெடுத்த சங்கர் என அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சங்கருக்கு இருந்த ஆர்வமே அந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது.

மானா பாடல்கள்
அந்தப் பாடல் வெற்றி பெற்றதை தொடர்ந்துதான் தொடர்ச்சியாக 'மா' வில் ஆரம்பிக்கும் பாடல்களை வாலி எழுதினாராம். மாயா மச்சிந்திரா, மாரோ மாரோ என்று சங்கர் படங்களில் மட்டுமல்லாமல் ரகுமான் கேட்டுக் கொண்டதால் முஸ்தாஃபா முஸ்தஃபா என்று பிறரது படங்களிலும் 'மா' வரிசையில் தொடங்கும் பாடல்களை வாலி எழுதிக் கொடுத்தாராம். பொதுவாக தான் இசையமைக்கு டியூனுக்குத்தான் பாடலாசிரியர்களை பாடல் எழுதச் சொல்வாராம் ரகுமான். ஆனால் வாலி என்று முடிவு செய்துவிட்டால், அவரையே பாடல் எழுதச் சொல்லிவிட்டு அதற்கு மெட்டமைப்பாராம். காரணம், அவரது வரிகளே புதுமையான டியூன்கள் தருமாம்.

மனோவின் அர்த்தராத்திரி அனுபவம்
ஒரு நாள் பகல் முழுக்க ரெக்கார்டிங்கில் பிறரது பாடல்களை பாடிவிட்டு முக்காலா பாட்டை பாட்டுவதற்காக இரவு நேரம் ரகுமான் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார் மனோ. அசதியில் 11.30 மணிக்கு தூங்கியவரை அதிகாலை 2.30 மணிக்கு எழுப்பிவிட்டு வித்யாசமாக பாடச் சொல்லியுள்ளார். அவரும் டி.எம்.எஸ், பி.பி.ஶ்ரீனிவாஸ் போன்றவர்களின் குரலில் வித்யாச வித்யாசமாக பாடியுள்ளார். பின்னர் சோர்வாகி வெளியே டீ குடிக்கச் சென்ற இடத்தில் திடீரென இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அவர்களின் குரல் ஞாபகத்திற்கு வந்து, அதனை ஸ்டூடியோவில் பாடிக் காண்பித்தாராம். இதுதான் நான் எதிர்ப்பார்த்த குரல் என்று ரகுமான் அப்படியே பாடச் சொல்லி ரெக்கார்ட் செய்திருக்கிறார். அப்படி உருவானதுதான் முக்காலா பாடல்.

விசா வாங்கித் தந்த முக்காலா
காதலன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து முதன் முறையாக சங்கர் அமெரிக்கா செல்வதற்காக விசா எடுக்கச் சென்றுள்ளார். அமெரிக்கன் எம்பஸியில் அவ்வளவு எளிதாக விசா கொடுக்கமாட்டார்கள். அதேபோல் இயக்குநர் சங்கரிடமும் ஒரு அமெரிக்க பெண் அரைமணி நேரம் கேள்விகளை கேட்டு விசா தர யோசித்தாராம். அப்போது அங்கு பணிபுரிந்த தமிழர் ஒருவர்,"இவர் வளர்ந்து வரும் புது இயக்குநர். காதலன் படத்தை இயக்கியுள்ளார்" என்று கூற, காதலன் என்றால் எந்தப் படம் என்று அந்தப் பெண் கேட்க,"முக்காலா முக்காபுலா" பாடலை குறிப்பிட்டுள்ளார் அந்த நபர். உடனே வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் விசா வழங்கினாராம் அந்தப் பெண்.


Click it and Unblock the Notifications











