வெள்ளை நிறத்தொரு பூனை.. கருப்பு மேக்கப் போடுவதேனோ? சினிமாவில் விளையாடும் ’கலர்’ அரசியல்!

சென்னை: இந்திய சினிமாவில், ஏன் உலக சினிமாவிலேயே இப்படியொரு கருப்பு - வெள்ளை 'கலர்' அரசியல் நெடுங்காலமாக நிலவி வருகிறது.

சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என ஆர்யா படத்தில் வரும் காமெடி வசனத்தை பலரும் உண்மையென நம்பி வருவது தான் இதில் வேடிக்கை.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை வெள்ளை நிற நடிகர்கள், ஏழை பங்காளனாகவும், உழைக்கும் வர்கத்தினராகவும் மாறும் கதாபாத்திரங்களுக்காக தங்களை கருப்பு நிற மேக்கப் போட்டும், வெயிலில் பல நாட்கள் கிடந்து, கருப்பான தோற்றத்தைக் கொண்டு வந்தும் நடிப்பதுவும் ஒரு வியாபார உக்தி தான் என்ற கருத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து இருக்கிறது.

பாலிவுட் பாகுபாடு

பாலிவுட் பாகுபாடு

இதை பற்றி பார்க்க நாம் கடந்த காலத்தில் ரொம்ப தூரம் எல்லாம் செல்ல வேண்டாம். கடந்த 2 ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து, வசூலில் கல்லா கட்டிய படங்களான கல்லி பாய், சூப்பர் 30 மற்றும் பாலா உள்ளிட்ட படங்களையே உதாரணமாக எடுத்துக் கொண்டு ஆராயலாம்.

கல்லி பாய்

கல்லி பாய்

யுனிட்டில் இருக்கும் அத்தனை லைட்டையும் மொத்தமாகக் கட்டி, காஸ்ட்லி மேக்கப் மேன்கள் முகத்தில் பெயின்ட் அடித்து ஏற்கனவே சிகப்பாக இருக்கும் பாலிவுட் நடிகர்கள், டிஐ உதவியுடன் மேலும் திரையில் ஜொலிப்பது போல எடுக்கப்படும் பாலிவுட் கமர்ஷியல் படங்களுக்கு நடுவே, ஸ்லம் டாக் மில்லியனர் போல, குடிசை பகுதிகளையும், ஏழை மக்களில் ஒருவன் தான் நாயகன் என காட்டப்பட்ட கல்லி பாய் படத்தில் ரன்வீர் சிங்குக்கு கருப்பு மேக்கப் அடித்து நடிக்க வைத்திருப்பார்கள்.

பிரவுன் ஃபேஸ் மற்றும் பிளாக் ஃபேஸ் இவை இரண்டையும், பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே ஒரு அழகற்ற நிறமாகவும், வறுமையின் உருவமாகவும் பார்க்கும் மனப்பாங்கு எப்போது தான் போகும் என்றே தெரியவில்லை.

புமி பெட்னேகருக்கு பிரவுன் மேக்கப்

புமி பெட்னேகருக்கு பிரவுன் மேக்கப்

இயக்குநர் அமர் கெளசிக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெறும் 25 கோடியில் எடுக்கப்பட்ட பாலா திரைப்படம் 170 கோடிகளுக்கும் மேல் வசுல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருந்தது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை புமி பெட்னேகர் நடித்திருப்பார். தனது நிறத்தை வைத்து பலரும் கிண்டல் செய்யும் கதாபாத்திரத்தில் புமி பெட்னேகரை நடிக்க வைக்க அவருக்கு பழுப்பு சாயம் பூசப்பட்டு இருக்கும். அதே நிறத்தில் இருக்கும் திறமையான நடிகையை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்காமல், ஏன் வெள்ளை நிற பூனைகளுக்கு கருப்பு மூலாம் பூசுகின்றனர் என்ற கேள்வி அந்த படத்தின் ரிலீஸின் போது பாலிவுட்டில் பயங்கரமாக ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

ஏழை பங்காளனின் நிறம்

ஏழை பங்காளனின் நிறம்

பாலிவுட் ஹன்க் என அழைக்கப்படும் ரித்திக் ரோஷன் சூப்பர் 30 படத்தில் சூப்பராக நடித்திருப்பார். ஆனால், மற்ற படங்களில் இல்லாத அளவுக்கு அந்த படத்தில் ஏழைப் பங்காளன் அவதாரமெடுக்கும் அவருக்கும் அதே போன்ற டார்க் மேக்கப்பையே கொடுத்திருப்பார்கள். கோடிக் கணக்கில் பணத்தை குவிக்க வேண்டுமென்றால் ஃபேமஸ் ஆன நடிகர்களைத் தான் நடிக்க வைக்க வேண்டியிருக்கிறது என்றும், அதுபோன்ற டார்க் ஸ்கின் நடிகர்களை நடிக்க வைத்தால் வியாபாரம் பாதிக்காதா? என்ற கேள்விகள் எல்லாம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து தாராளமாகவே வந்து விழுகின்றன.

பரதேசி

பரதேசி

நம்ம ஊரிலும், சிகப்பா இருக்கும் சியான் விக்ரமை பல் விளக்காமல், டார்க் மேக்கப் போட வைத்து பிதாமகனாகவும், வெள்ளையா இருக்கும் ஆர்யாவை ஸ்கின் டோன் குறைத்து நான் கடவுள் மற்றும் அவன் இவன் படங்களில் நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் பாலா. போதா குறைக்கு, சாக்லேட் பாயாக இருக்கும் அதர்வாவை முழு பட்டி டிக்கரிங் பார்த்து பரதேசியாகவே மாற்றி இருப்பார்.

வியாபார அரசியல்

வியாபார அரசியல்

வெள்ளை நிற நடிகர்களை கருப்பு நிற மனிதர்களாக மாற்றி நடிக்க வைப்பதில் ஒரு மிகப்பெரிய வியாபார அரசியலே இருப்பதாக பழங்காலமாக பலரும் போர்க்கொடி தூக்கி வருவதும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டே இருக்கிறது. ஹாலிவுட்டில், வெள்ளை நிற நடிகர்களுக்கே ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுப்பதாக சர்ச்சைகள் எழுந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

உலக அழகி

உலக அழகி

அழகிப் போட்டிகள் நடத்தப்படுவது அழகு சாதன பொருட்களை விற்கவே என்பதும், அழகிப் போட்டிகளில் வெல்லும் அழகிகள் பாலிவுட்டில் திறமையான நடிகைகளாக மாற்றப்பட்டு வருவதையும் நாம் பல முறை கண்டு ரசித்திருக்கிறோம். ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா என நீளும் இந்த பட்டியல் கடைசியாக அழகிப் போட்டியில் மகுடம் சூடிய மானுஷி சில்லரையும் இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கும் பிருத்விராஜ் படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக மாற்றி இருக்கிறது.

அழகு சாதனப் பொருட்கள்

அழகு சாதனப் பொருட்கள்

இப்படி வெள்ளைத் தோல் இருந்தால் போதும் நடிக்க வாய்ப்பும் உச்ச நட்சத்திரம் அந்தஸ்த்தும் கிடைத்து விடும் என்கிற மரபு எப்போது தான் மாறப் போகிறதோ என்பது பில்லியன் டாலர் கேள்வி தான்.

ஆனால், இதனை மாற விடாமல் வளர்த்து வருபவர்கள் பெரும்பாலும் அழகு சாதன பொருட்களை விற்கும் பெரு வணிகர்கள் தான் என்ற குற்றச்சாட்டுக்களும் கால காலம் எழுந்து வருகிறது.

பாலிவுட் நடிகர்களை அழகு சாதன பொருட்களை விற்கும் கருவிகளாக வெகு காலமாக அவர்கள் பயன்படுத்தி வருவது அந்த பிரபலங்களுக்கு கூட தெரியாமல் இருப்பதும் வேடிக்கையான ஒன்று தான்.

பாலிவுட் பாட்ஷா

பாலிவுட் பாட்ஷா

பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த அழகு சாதன க்ரீம்களை ஆண்களும் பயன்படுத்த வேண்டும் என்ற யுக்தியில் உருவாக்கப்பட்ட ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம் விளம்பரத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்ததால், இந்தியாவில் எத்தனை கருப்பு ஆண்கள் தாங்களும் ஷாருக்கான் போல ஜொலிப்போம் என்ற கனவில் அதை வாங்கி இன்னமும் உபயோகித்து வருகின்றனர் என்பது தெரியுமா?

27 ஆயிரம் பேர் கையெழுத்து

27 ஆயிரம் பேர் கையெழுத்து

இப்படி கருப்பாக பிறந்தவர்களை கீழ் நிலை மக்களாக படங்களில் சித்தரித்து சித்தரித்து வந்தே அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகம் வளர்ப்பதும் வளரவிடுவதும் இந்த பிரபலங்கள் அறிந்தும் அறியாமலும் செய்து வரும் பெரிய தவறாகும். 2013ம் ஆண்டு கிட்டத்தட்ட 27000 பேர் ஷாருக்கான் அந்த விளம்பரத்தில் நடிக்கக் கூடாது என கையெழுத்து பெற்று மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு கார்டியன் இதழுக்கு பேட்டியளித்த பாலிவுட் பாட்ஷா, தான் ஒரு முறை கூட அந்த அழகு சாதனத்தை பயன்படுத்தியது கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.

தீபிகா டு தமன்னா

தீபிகா டு தமன்னா

நடிகைகள் தீபிகா படுகோனே தொடங்கி தமன்னா வரை இந்திய அளவில் பல நடிகைகள் தங்களின் நிறத்தைக் கொண்டு வியாபார படங்களில் நடித்து, இந்த சோப்பை போட்டு குளித்தால் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடுவீர்கள் என உண்மையை சொன்னால் அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

எங்க இஷ்டம்

எங்க இஷ்டம்

வெள்ளை நிற நடிகர்களுக்கு கருப்பு சாயம் ஏன் பூசப் படுகிறது என்ற கேள்விக்கு பதிலாக? யாரை எங்க படத்துக்கு தேர்வு செய்ய வேண்டும், யாரை தேர்வு செய்யக் கூடாது என்ற சுதந்திரம் தங்களுக்கு இருப்பதாகவும், சிறந்த நடிப்பை அவர்களால் தான் கொடுக்க முடியும் என்ற கேட்டு கேட்டு புளித்துப் போன பதில்களையுமே இயக்குநர்கள் கூறி வருவது காலக் கொடுமை.

சூப்பர்ஸ்டார்

சூப்பர்ஸ்டார்

டார்க் ஸ்கின் டோன் உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் திறமையானவர்கள் தான் என இந்தியாவில் பலரும் பல முறை நிரூபித்து இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருப்பு தான் கலை என்றும், தனது நிறத்தால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் நடிகர்களின் திறத்தால் ஆவது தான் எனக் காட்டியவர். வெற்றிக் கொடி கட்டு படத்தில் வெளியான "கருப்புத் தான் எனக்கு பிடிச்ச கலரு" பாடல் கருப்பானவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டார்க் இஸ் பியூட்டி

டார்க் இஸ் பியூட்டி

நடிகை நந்திதா தாஸ், ‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்' என்ற இயக்கத்தையே நடத்தி கருப்பு நிறத்தை மக்கள் போற்ற வேண்டும், அதனை சாபக்கேடான நிறமாக நினைக்கக் கூடாது என நெடுங்காலமாக போராடி வருகிறார். அவரையே நல்ல படித்த பெண் கதாபாத்திரங்கள் மற்றும் பெரிய இடத்துப் பெண் கதாபாத்திரங்களில் ஒப்பந்தம் செய்யும் போது, நீங்க கவலைப் படாதீங்க மேடம் எப்படி லைட் கொடுத்து உங்களை மிளிர வைக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியும் என இயக்குநர்கள் மாற்றி வருவது அவர்களின் மாறாத மனநிலையே காட்டுகிறது என நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

இது மாற வேண்டும், இந்த மாற்றத்தை பிரபலங்களே ஏற்படுத்த வேண்டும், நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என வெளியேறினால், பல மில்லியன் இந்தியர்கள் திருந்த வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த மாற்றம் நிகழ்வது எப்போது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X