twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உருவாகுமா தமிழ் உணர்வுடன் கூடிய நடிகர் சங்கம்?

    By Sudha
    |

    Bharathiraja and Sarathkumar
    தமிழனின் பணம் வேண்டும், உழைப்பு வேண்டும். ஆனால் அவனுக்கு ஏதாவது என்றால் மட்டும் உடனே அவனை மறந்து விடுவது, யாராவது சுட்டிக் காட்டினால் குத்திக் காட்டினால் மட்டும் ஒப்புக்கு ஏதாவது அறிக்கை விடுவது அல்லது ஏதாவது ஒரு கண் துடைப்புப் போராட்டத்தை நடத்தி விட்டு தன் பாட்டுக்கு பொழப்பைப் பார்ப்பது என்று இருந்து வரும் திரைத் துறையினருக்கு மத்தியில் அத்திப் பூ போல பாரதிராஜா, தங்கர்பச்சான் போன்றவர்கள் இருந்து வருகின்றனர்.

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்த் திரையுலகம் இதுவரை பொங்கி எழவில்லை. ஒப்புக்கு ஒரு அறிக்கை கூட விடவில்லை. குறிப்பாக நடிகர் சங்கம் வாயில் பிளாஸ்திரி போட்டுக் கொண்டு கம்மென்று இருக்கிறது. அங்கிருந்து ஒரு சின்ன முனுமுனுப்பு கூட கிளம்பவில்லை. இத்தனைக்கும் மலையாளத் திரையுலகின் அத்தனை சங்கங்களும் பகிரங்கமாக கேரள அரசுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மலையாள நடிகர் சங்கம் சின்னதாக ஒரு போராட்டத்தைக் கூட நடத்தி விட்டது.

    ஆனால் தமிழ் சினிமாக்காரர்கள் அமைதியாகஇருக்கிறார்கள். இதைத்தான் நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் கண்டித்துப் பேசினார் பாரதிராஜா. இதன் விளைவு தற்போது அவர் மீது வழக்கைப் போட்டு விட்டது அதிமுக அரசு.

    இருப்பினும் தற்போது தமிழ் உணர்வுடன் கூடிய நடிகர் சங்கம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. மலையாளத்தில் தனியாக நடிகர் சங்கம் உள்ளது. கன்னடத்திலும் அப்படியே, தெலுங்கிலும் அப்படியே. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும்தான் அது தென்னிந்திய நடிகர் சங்கமாக உள்ளது. கேட்டால், நாம் பெருந்தன்மையாக பார்க்க வேண்டும், குறுகிய பார்வை கூடாது என்று விளக்கம் அளிப்பார்கள்.

    ஆனால் தென்னிந்தியாவின் தாய்த் திரையுலகமான தமிழ் சினிமாக்காரர்களை (வியாரபாரம் தவிர்த்து) பிற சினிமாத்துறையினர் சற்றும் மதிப்பதில்லை. அவரவர் மாநிலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக தமிழ் சினிமாவை உதறித் தள்ளி விடுகிறார்கள். அப்படி இருந்தும், ஆளாளுக்கு ஆப்படித்தும் கூட தமிழ் சினிமாக்காரர்கள் பிடிவாதமாக பிற மொழியினரைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை, இவர்களாகப் போய் போய் ஒட்டிக் கொள்வது பாரம்பரியமாகி விட்டது.

    காவிரிப் பிரச்சினையில் இந்தநிமிடம் வரை கன்னடத் திரையுலகினர் அந்த மாநில அரசுக்கு ஆதரவாக உள்ளனர். முல்லைப் பெரியாறு விஷயத்தில் மலையாள திரையுலகினர் கேரள அரசுக்கு ஆதரவைத் தெரிவித்து விட்டனர். கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்சினையில் ஆந்திர அரசுக்கு தெலுங்குத் திரையுலகினர் முழு ஆதரவுடன் உள்ளனர். ஆனால் தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் தமிழ்நாட்டு நடிகர் சங்கம் இதுவரை ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆதரவு உண்டா, இல்லையா என்பதைக் கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு அங்கு அத்தனை பேரும் ஏக பிசியாக உள்ளனர்.

    இதைத்தான் பாரதிராஜா கண்டித்துள்ளார். நேற்று நடந்த கூட்டத்தி்ல அவர் பேசுகையில்,

    முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை பணத்தை சாப்பிடுபவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் என்று தனியாக இருக்கிறது. அது போல் தமிழ் நடிகர் சங்கம் உருவாக வேண்டும் நமக்காக குரல் கொடுக்காதவர்களுக்கு பட்டாபிஷேகம், பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று கடுமையாக சாடினார் பாரதிராஜா.

    முன்பு பெப்சி விவகாரத்தை வைத்து தமிழ்ப் படைப்பாளிகள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நடிகர் சங்கத்தின் பெயரையும் கூட தமி்ழ் நடிகர் சங்கம் என மாற்றுவோம் என்றும் பேசினார். ஆனால் இடையில் புகுந்த பாலிட்டிக்ஸ் மற்றும் ஒற்றுமையின்மையால் அத்தனையும் காணாமல் போய் விட்டன.

    இப்போதாவது தமிழ் உணர்வுடன் கூடிய நடிகர் சங்கத்தை உருவாக்க முயற்சிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

    English summary
    Director Bharathi Raja has slammed Nadigar Sangam for its deepening silence over Mullaiperiyar issue. This has raised a question whether a Pro Tamil Nadigar Sangam will born for the sake of Tamils among the people of this state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X