உங்க வீட்டுக்கு என் மகளைக் கொடுக்கமாட்டேன்... ராட்சச மாமியாரைப் பார்த்து சவால் விட்ட சாந்த மாமியார்!

சென்னை: சில நேரங்களில் சில டிவி நிகழ்ச்சிகள் உண்மையிலேயே நம்மை ரசிக்க வைத்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நேற்று வேறு வழியில்லாமல் (வீட்டுக்காரம்மா பார்க்கும்போது நாம புறக்கணிக்க முடியாதே) காண நேர்ந்தது. ஆனால் பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக அமைந்து போனது (நிச்சயமாக கோபிநாத் என்னைக் கவரவில்லை - வழக்கம் போல).. மாறாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாமியார்களின் பேச்சுக்கள்தான் சுவாரஸ்யத்திற்குக் காரணம்.

ஒரு மாமியார் என்றாலே மூச்சு முட்டிப் போய் விடும். இதில் குண்டு குண்டாக, முரட்டுத்தனமாக பல மாமியார்களை ஒரே நேரத்தில் பேச விட்டால் எப்படி இருக்கும்.. இவர்களின் பேச்சைக் கேட்க கேட்க, இவர்களுக்கு மருமகள்களாக வாய்த்த அந்த சகோதரிகளின் தினசரி வாழ்க்கை ஒரு "செகன்ட்" மனதில் மின்னல் மாதிரி ஓடி பெரும் கிலியை ஏற்படுத்தி விட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கோபிநாத் வைத்த பெயர் நான் கண்டிப்பான மாமியார், நான் தோழமையான மாமியார்.. ஆனால் நிகழ்ச்சியை பார்த்த நமக்குத் தோன்றியது இப்படித்தான்.. ராட்சத மாமியார்களும், தேவதை மாமியார்களும்!

வாங்க நிகழ்ச்சிக்குப் போவோம்....

முரட்டு மாமியார்கள்

முரட்டு மாமியார்கள்

ஒரு பக்கம் முரட்டு மாமியார்கள் கூட்டம். எதிர்த் தரப்பில் சாந்தமான, மருமகள்களுக்கு அனுசரணையான மாமியார்கள் கூட்டம். இரு தரப்பும் பேசப் பேச நிகழ்ச்சி அரங்கே செம சூடாகிப் போனது.

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள!

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள!

இது ஒரு படத்தில் எம்.ஜி.ஆர். பாடும் பாடல். அப்போதே இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நேற்று முரட்டு மாமியார்கள் வரிசையில் பேசிய இரண்டு மாமியார்கள்தான் பட்டையைக் கிளப்பி விட்டனர். மருமகளை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவர்களது பேச்சின் மூலம் ஊகித்தபோது, அந்த மருமகள்கள் நிலையை நினைத்து அத்தனை பேருமே அரண்டுதான் போயிருப்பார்கள்.

மல்ட்டி கலர் மாமியார்!

மல்ட்டி கலர் மாமியார்!

மல்ட்டி கலர் சேலையில், கருப்பு நிறத்தில் இருந்த அந்த முரட்டு மாமியார்தான் அனைவரையும் பயமுறுத்திய பயங்கர மாமியார். கண்ணாடி போட்டிருந்த அந்த மாமியார் உணவிலிருந்து தனது "உணர்வுகளை" ஆரம்பித்தார். அவர் பேசுகையில், சாப்பாடு விஷயத்தில் என் கண்ட்ரோல்தான். சமையலும் என் இஷ்டப்படிதான். இது மாதிரி செய், அது மாதிரி செய்யாதே. எதையும் வேஸ்ட் செய்யாதே என்பேன்.

நீட்டா இருக்கனும்

நீட்டா இருக்கனும்

நான் சொல்வது போலத்தான் சமைக்க வேண்டும். ஒரு பாத்திரத்திற்கு 9 பாத்திரத்தை எனது மருமகள் பயன்படுத்துவாள். அது எனக்குப் பிடிக்காது. அவள் சமையல் செய்யும்போது துரத்திக்கிட்டே இருப்பேன். இப்படியெல்லாம் செய்யாதே, எனது மகனுக்குப் பிடிக்காது என்பேன். ரொம்ப நீட்டா இருந்தாதான் எனக்குப் பிடிக்கும்.

இப்படித்தான் பண்ணும்...

இப்படித்தான் பண்ணும்...

நான்தான் பெரும்பாலும் சமையல் செய்வேன். அவள் செய்வதாக இருந்தால் இப்படித்தான் பண்ணனும் என்பேன். அப்படி அவளுக்கு செய்ய வராவிட்டால் நானே செய்வேன் என்றார் அந்த மாமியார்.

மருமகள் கிட்ட ஏன் பயம்

மருமகள் கிட்ட ஏன் பயம்

மேலும் அவர் பேசுகையில், மருமகளிடம் ஏன் பயம். தேவையில்லை. ஆரம்பத்திலேயே மருமகள்களிடம் சொல்லிச் சொல்லி கட்டுப்படுத்த வேண்டியதுதானே. இல்லாவிட்டால் நீங்கள் அவளுக்கு அடிமையாகிப் போவீர்கள்.

அது என்ன அம்மா..!

அது என்ன அம்மா..!

மருமகள் அம்மான்னு சொல்வதை நான் ஏற்க மாட்டேன். அது என்ன அம்மா. அவளோட அம்மாதான் அவளுக்கு அம்மா. நான் மாமியார். அம்மா வேற, மாமியார் வேற. ஒரு அம்மாதான், ஒரு மாமியார்தான்.

குப்பை இருந்தா எடுக்கனும்.. உடனே!

குப்பை இருந்தா எடுக்கனும்.. உடனே!

வீட்டில குப்பை இருந்தா உடனே எடுக்கனும். சொன்னா செய்யனும். அவ மாறுவாளா, மாற மாட்டாளான்னு எனக்குக் கவலையே இல்லை. எனக்கு தெம்பு இருக்கும் வரைதான் நான் தான் சமைப்பேன். சொல்லிட்டுத்தான் இருப்பேன். அவ சமைச்சா அத அவ புருஷன் சாப்பிடட்டும். நான் சாப்பிட மாட்டேன்.

அவளை சார்ந்திருக்க மாட்டேன்

அவளை சார்ந்திருக்க மாட்டேன்

அவளை நான் ஒருபோதும் சார்ந்திருக்க மாட்டேன். எனக்குத் தெம்பு இருக்கும் வரை நான்தான் செய்வேன் என்று வெடித்தார் இந்த மல்ட்டி கலர் மாமியார்.

பச்சை சேலை மாமியார்

பச்சை சேலை மாமியார்

அதேபோல பச்சை சேலையில், கண்ணாடி போட்ட இன்னொரு மாமியாரும் பின்னி எடுத்தார் வார்த்தைகளில். இவர் கூறுகையில், ரசம்னா இ்ப்படித்தான் இருக்கனும், சாம்பார்னா இப்படித்தான் இருக்கனும். என் பையன் இப்படித்தான் சாப்பிடுவான். என் வீட்டு சமையல் இப்படித்தான் இருக்கனும்.

அவ மட்டுமா சாப்பிடுறா

அவ மட்டுமா சாப்பிடுறா

அவ மட்டுமா சாப்பிடுறா. வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டாமா. எனவே நான் நிச்சயம் தலையிடுவேன். சாப்பாட்டை வீணாக்கக் கூடாது. என் கட்டுப்பாட்டில்தான் சமையல் இருக்க வேண்டுபம்.

பல்லி விழுந்திருச்சுன்னா...

பல்லி விழுந்திருச்சுன்னா...

சாப்பாட்டு பாத்திரத்தை மூடுன்னா மூடனும். பின்னாடி பல்லி விழந்திருச்சின்னா யார் சாப்பிடுவது...

டைமுக்கு வரணும்

டைமுக்கு வரணும்

லேட்டாக வீட்டுக்கு வரக் கூடாது. அப்படி லேட்டாகுதா, போன் பண்ணிச் சொல்லனும். எங்க இருக்கேன்னு சொல்லனும். நீ லேட்டாக வந்தால் உன் பிள்ளைக்கு சாப்பாடு தருவது யார்.

சொன்னாதான் சரிவரும்

சொன்னாதான் சரிவரும்

ஒழுங்கீனத்தை சரி செய்ய சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சரி வரும். பேனை ஆப் பண்ணு, துணியை மடிச்சு வை, லைட்டை ஆப் பண்ணு, எடுத்ததை எடுத்த இடத்தில் வை. என்று சொன்னால்தான் செய்வார்கள் என்றார் இந்த பச்சை கலர் மாமியார்.

படித்தவர்கள் - தெரிந்தவர்கள்

படித்தவர்கள் - தெரிந்தவர்கள்

மறுபக்கம் சாந்தமான மாமியார்கள் வரிசையில் மருமகள்களை தட்டிக் கொடுக்கும் வகையில் பலரும் பேசினர். இந்தக் காலத்துப் பெண்கள் படித்தவர்கள், அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. எனவே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை.

திறமையாக இருக்கிறார்கள்

திறமையாக இருக்கிறார்கள்

ஒரு சாந்த மாமியார் கூறுகையில், எனக்கு 17 வயதில் கல்யாணம் நடந்தது. அப்போது எனக்கு எதுவும் தெரியாது. மாமியார் சொல்லித்தான் எனக்குத் தெரியும் எல்லாமே. எனது மருமகளுக்கு 23 வயதில் கல்யாணம் நடந்தது. அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத் தேவையில்லை. அவள் திறமையாக இருக்கிறாள். நான் திறமையாக இல்லை என்றார்.

தலையிடத் தேவையில்லை

தலையிடத் தேவையில்லை

இன்னொரு அமைதி மாமியார் கூறுகையில், மருமகள் சமைப்பது நமது மகனுக்குப் பிடித்திருக்கலாம். நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவனுக்குப் பிடித்திருக்கிறது. எனவே சமையிலல் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

அடேங்கப்பா மாமியார்

அடேங்கப்பா மாமியார்

இந்த பெண்மணி, மல்ட்டி கலர் மாமியாரைப் பார்த்து, எனக்குத் திருமணமாகி 47 வருடமாகிறது. ஆனால் இவரைப் போல பேசிய மாமியாரைப் பார்த்ததே இல்லை. எனக்கே பயமாக இருக்கிறது. இப்படி இவர் பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது. மருமகள் செய்யக் கூடாது என்றால் அவள் எப்போதுதான் கற்றுக் கொள்வது, அவர் இஷ்டத்திற்கும் செய்ய வேண்டாமா என்று கூறியபோது மல்ட்டி கலர் மாமியாரே வாய் விட்டுச் சிரித்தார்.

மகளைப் போல நினையுங்கள்

மகளைப் போல நினையுங்கள்

இன்னொருவர் பேசுகையில், மருமகளை மகள் போல, தோழி போல நினைக்க வேண்டும். வேலைக்குப் போனாலும் வீட்டு வேலைகளையும் அவர்கள் செய்யத் தவறுவதில்லை. அவர்களை மதிக்க வேண்டும் என்றார்.

அன்பு காட்டுக

அன்பு காட்டுக

இன்னொரு மாமியார் பேசுகையில், நேரம் நிர்ணயித்து மருமகளை கட்டுப்படுத்தினால் அது மிலிட்டரித்தனம். அன்பு காட்டித்தான் பேச வேண்டும். சர்வாதிகாரமாக நடந்தால் அது கூட்டுக் குடித்தனம் அல்ல, அதுவும் கூட தனிக்குடித்தனம் போலத்தான் இருக்கும்.

சனியன் என்று கூறக் கூடாது

சனியன் என்று கூறக் கூடாது

மருமகளை நாம் தட்டிக் கொண்டே இருந்தால், அவள் நம்மை சனியன் என்றுதான் அழைப்பாள். சனியன் சாப்பிடனும், சனியனுக்கு சமைக்கனும் என்றுதான் திட்டுவாள்.

ஊசியையே ஏத்தக் கூடாது

ஊசியையே ஏத்தக் கூடாது

ஊசியில்தான் வாழைப்பழத்தை ஏத்தனும், ஊசியையே ஏத்தக் கூடாது. நான் அப்படி இருக்க மாட்டேன் என்றார்.

எங்க வீட்டுக்கு மூதேவி வரலையே!

எங்க வீட்டுக்கு மூதேவி வரலையே!

இன்னொரு முரட்டு மாமியார் கூறுகையில் காலையில் மருமகள் எழுந்து வீடு வாசலைப் பெருக்கி கோலம் போட்டால் வீட்டுக்கு மூதேவி வர மாட்டாள் என்றார். அதைக் கேட்ட சாந்த மாமியார் ஒருவர். எங்க வீட்டில் மாமியாரும் லேட்டுதான், நானும் லேட்டுதான். ஆனா எங்க வீட்டுக்கெல்லாம் மூதேவி வந்ததே இல்லை. ஸ்ரீதேவிதான் வந்திருக்கா.. உங்க வீட்டுக்கு மட்டும் எப்படி வந்த மூதேவி... என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

முதலிடத்தை தக்க வைக்க டிரிக்ஸ்

முதலிடத்தை தக்க வைக்க டிரிக்ஸ்

மருமகள் வந்த பின்னரும் கூட நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதை தக்க வைக்க முரட்டு மாமியார்கள் செய்யும் தந்திரங்களைக் கேட்டபோது அயர்ச்சியாக இருந்தது. அடடா, நம்ம அம்மாக்கள் இப்படில்லாமா நடக்கிறார்கள் என்று அவர்களது பிள்ளைகளே அதிர்ந்துதான் போவார்கள்.

ஏத்தி விட்டு !

ஏத்தி விட்டு !

ஒரு மாமியார் கூறுகையில், மகனிடம் மருமகள் பத்தி மூட்டி விட்டு சண்டை ஏற்படுத்தி எனது பக்கம் எனது மகன் இருப்பது போலப் பார்த்துக் கொள்வேன் என்று கூறியதைக் கேட்டபோது, நேற்று ராத்திரியே அந்த மகன் கொந்தளித்து அம்மாவிடம் சண்டை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றியது.!

சீன் போடுவன்

சீன் போடுவன்

இன்னொரு மாமியார், நான் சோகமாகப் போய் படுத்துக்குவேன். உடனே ஓடி வந்துருவான் என் மகன் என்றார் சிரித்தபடியே.

நீ வேண்டாம்டா.. என் பேரன் இருக்கான் போடா!

நீ வேண்டாம்டா.. என் பேரன் இருக்கான் போடா!

சாந்த மாமியார்களில் ஒருவர் பேசுகையில், எனது மகனுக்குத் திருமணமான பின்னர் நான் 9 மாதம் வரைதான் தனிமையாக உணர்ந்தேன். ஆனால் அதன் பிறகு பேரன் பிறந்ததும் அது போய் விட்டது. ஆயா ஆயான்னு சொல்ல என் பேரன் இருக்கான். நீ போடா. இவனைப் பத்தி எனக்கு என்ன அவசியம். தங்க விக்கிரகம் மாதிரி பேத்தியும் பொறந்தா. அவங்களை விட வேற என்ன இருக்கு. என் மகனே பேரனா வந்துட்டான். அவனோடு நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். சாப்பாடு ஊட்டுகிறேன். நான் அவனுக்கு நல்ல பிரண்ட் மாதிரி இருக்கேன். அவனோட அப்பா, அம்மா கூட பிரண்ட் இல்லை. ஆயா என்று அவர்கள் சொல்வதைக் கேட்டாலே போதும் எனக்கு மகிழ்ச்சியில் இதயம் பட்டாம் பூச்சி மாதிரி மாறி விடுகிறது. எடையும் கூடி விட்டது. நீங்க ஹாயா இருங்க, நான் ஆயாவா இருந்துட்டுப் போறேன் என்றார் பூரித்தபடி.

தனிமையும் தவிப்பும்

தனிமையும் தவிப்பும்

அதேசமயமம், சாந்தமான மாமியார்கள் பலரும் மருமகளிடம் தங்களது முதலிடத்தை இழக்கும்போது வீ்ட்டில் தாங்கள் தனிமையையும், தவிப்பையும் சந்திப்பதாக பொதுவாக தெரிவித்தனர். ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை கூறுகையில், சில நேரங்களில் நாம் தனிமைப்படுத்தப்படுகிறோம் என்று நினைக்கும்போது நான் தனியாக போய் அழுவேன். இன்றும் கூட அழறேன் என்று கூறியபோது உருக்கமாக இருந்தது.

இழப்பும்.. லாபமும்

இழப்பும்.. லாபமும்

இந்த விவாதத்தைப் பார்த்தபோது ஒருபக்கம் தங்களது இடத்தையும், அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் தக்க வைக்க அதீத சர்வாதிகாரத்தை ஒரு தரப்பு மாமியார்கள் காட்டுகிறார்கள் என்பதையும், தாங்கள் தொடர்ந்து கெளரவாக வாழ அன்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து அதன் மூலம் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு தரப்பு மாமியார்கள் சாந்தமாக போராடி வருவதாகவும்தான் நம்மால் உணர முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X