நடிகர் கவுண்டமணியின் 20 வருட போராட்டம் வெற்றி! சென்னையில் தனது சொத்தை மீட்டார்.. நடந்தது இதுதான்
சென்னை: நடிகர் கவுண்டமணிக்கு ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையுடன் இருந்த சொத்து பிரச்சனை குறித்த வழக்கில் கவுண்டமணி வெற்றி பெற்றிருக்கிறார். 1998 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ அபிராமி அறக்கட்டளை நிறுவனத்துடன் நடிகர் கவுண்டமணிக்கும் அவருடைய ஒரு குடும்பத்தினருக்கும் இருந்து வந்த சொத்து பிரச்சனை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்த்து, 2021 ஆம் ஆண்டு கட்டிட நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த வகையில் நடிகராக பல வருடங்களாக சினிமா துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் கவுண்டமணி சொந்த வாழ்க்கையில் 20 வருடங்களாக சொத்து பிரச்சனையில் போராடிக் கொண்டிருக்கிறார். அதாவது நடிகர் கவுண்டமணியும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் 1996 ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து நிலத்தை வாங்கி இருக்கிறார்கள்.
அந்த நிலத்தை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 2200 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த கட்டுமான பணிகளுக்காக மூன்று கோடியே 58 லட்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1996 முதல் 1999 வரை ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாயை கவுண்டமணி செலுத்திய நிலையில் அந்த நிறுவனம் 2003 வரை கட்டுமான பணிகளை துவங்காததால் கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் பணிகளை முடித்ததாக வழக்கறிஞர் ஆணையம் வாயிலாக தெரிய வந்தது.
இதை அடுத்து கவுண்டமணியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 1, 2008 முதல் மீண்டும் சொத்து கவுண்டமணியிடம் ஒப்படைக்கும் வரைக்கும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக கவுண்டமணி மற்றும் அவருடைய மனைவி சிஎம் சாந்தி, மற்றும் மகள்கள் சிஎம் செல்வி, சிஎம் சுமித்ராவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
2019ல் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து 2021ல் ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் கட்டுமான நிறுவனத்தில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











