Pandiarajan: சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த நடிகர் பாண்டியராஜன்.. எந்த சீரியல் தெரியுமா?
சென்னை:நடிகர் பாண்டியராஜன், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் பல ஆண்டுகளாக கோலிவுட்டில் மிகச்சிறப்பாக செய்லபட்டவர். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். குடும்ப சென்டிமெண்ட் மற்றும் சிறப்பான திரைக்கதைதான் பாண்டியராஜன் படங்களின் சிறப்பாக இருந்தது.
பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய பாண்டியராஜன் கன்னிராசி படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் பிரபு, ரேவதி உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் இந்தப் படம் மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து தான் இயக்கிய ஆண் பாவம் படத்தில் பாண்டியனுடன் இணைந்து ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார்.

நடிகர் பாண்டியராஜன்: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி 90களின் காலகட்டத்தில் முன்னணி இயக்குநராகவும் சிறப்பான காமெடி மற்றும் குணசித்திர நடிகராகவும் வலம் வந்தவர் பாண்டியராஜன். இயக்குநர் தூயவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த பாண்டியராஜன், ஒரு கட்டத்தில் பாக்கியராஜின் அறிமுகத்தால் அவரது உதவி இயக்குநராக மாறினார். அந்த வகையில் தூறல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள் போன்ற படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இயக்குநராக என்ட்ரி: இதையடுத்து கன்னி ராசி என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க, பிரபு மற்றும் ரேவதியை வைத்து அந்தப் படத்தை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிக் காட்டினார் முன்னதாக நடிக்கும் ஆசையில் பலரிடம் வாய்ப்பு கேட்ட பாண்டியராஜனுக்கு அவரது உயரம் மற்றும் முழி போன்றவை விமர்சனங்களுக்கு உள்ளானது. அவருக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தனக்கான வாய்ப்பை உருவாக்கினார். ஆண் பாவம் படத்தில் பாண்டியன், சீதா, ரேவதியுடன் இணைந்து நடித்திருந்தார். தன்னுடைய மைனசாக கூறப்பட்ட அனைத்தையும் இந்தப் படத்தில் ப்ளஸாக மாற்றிக் காட்டி சாதித்தார். இந்தப்படமும் சூப்பர் ஹிட்தான்.
சின்னத்திரையில் என்ட்ரி: தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் செயல்பட்ட பாண்டியராஜன், இறுதியாக தன்னுடைய மகனை வைத்து கை வந்த கலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தொடர்ந்து படங்களை இயக்காத பாண்டியராஜன், மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இடையில் சில காலங்களில் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பாண்டியராஜன் தற்போது சின்னத்திரையில் கமிட்டாகியுள்ளார்.
வீரா சீரியலில் பாண்டியராஜன் என்ட்ரி: ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் ஜட்ஜாக நடிக்கவுள்ளார் பாண்டியராஜன். இதையொட்டிய சீரியலின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. செய்யாத தவறுக்காக கதாநாயகன் ஜெயிலில் அடைபட்டிருக்க அவரை மீட்க நாயகி வீரா செய்யும் அடுத்தடுத்த செயல்களை ஒட்டி இந்த சீரியலின் கதைக்களம் அமைந்து வருகிறது. இதில் ஜட்ஜாக பாண்டியராஜன் இருக்கும் நிலையில் தன்னுடைய கணவருக்காக தானே வாதாடிக் கொள்வதாக நாயகி கூறுவதாக காணப்படுகிறது. அவரது போராட்டத்திற்கு ஜட்ஜ் பாண்டியராஜன் உதவுவதாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











