சிவாஜிக்கு நான் சொன்ன ஜோசியம் பலித்தது.. எட்டணா காசு.. மனோரமா அழுதுட்டாங்க!- வெண்ணிற ஆடை மூர்த்தி
சென்னை: நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பல முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தாலும் நடிகர் சிவாஜியோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதே நேரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியை நடிகராகவே பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் ஒரு ஜோதிடர் அதனாலேயே அவருக்கு ஜீ தமிழில் ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதே நேரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது வெறும் ஜோதிடத்தை மட்டும் சொல்லாமல் அதோடு சார்ந்த புராணக் கதைகளையும் சொல்லி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். இந்த நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொன்ன ஜோதிடம் பலித்தது குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் காமெடி நடிகராக மூன்று தலைமுறை நடிகர்களை பார்த்த நடிகர் என்றால் அது வெண்ணிற ஆடை மூர்த்தியாக தான் இருக்க முடியும். இவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களோடு குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல நிகழ்ச்சிகளில் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்.
இவருடைய டைமிங் காமெடி மற்றும் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. ஆனால் சமீப காலமாக இவர் சினிமாவிலும் சரி சின்ன திரையிலும் சரி காணப்படவில்லை. இது குறித்து ரசிகர்கள் இவரை அதிகமாக தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ராக்ஸ்டார் மனோ என்ற ரவுண்டில் மனோவிற்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி தான் நடிகர் சிவாஜிக்கு சொன்ன ஜோதிடம் குறித்து பேசி இருக்கிறார். அதில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசுகையில், ஒரு முறை நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது சிவாஜி சார் அங்கே வந்தார். சிவாஜி சார் என்னிடம் நல்லாவே பேசுவார். அப்போ என்னிடம் நீ எல்லாருக்கும் ஜோசியம் சொல்லுவியாமே அப்போ எனக்கும் சொல்லு என்று கேட்டார்.
அதற்கு நான் சும்மா சொல்லு என்றால் எப்படி சொல்லுறது? உங்க ஜாதகத்தை கொடுங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நாளைக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க என்று சொன்னார். அதுபோல அடுத்த நாள் என்னுடைய கையில் ஜாதகம் வந்தது. அதை நான் பார்த்துவிட்டு சார் உங்களுக்கு வரும் பிப்ரவரி மாதத்தில் கவர்மெண்ட் ஆர்டர் ஒன்னு வரும் என்று சொன்னேன். அவர் என்ன விஷயமாய் இருக்கும் என்று கேட்டார்.
அதற்கு நான் அது எனக்கு சரியா தெரியல சார். ஆனால் பிப்ரவரி மாதத்தில் உங்களுக்கு ஒரு கவர்மெண்ட் ஆர்டர் மட்டும் கிடைக்கும் என்று எனக்கு தெரிகிறது என்று சொல்லி இருந்தேன். அதுபோல அவருக்கு பிப்ரவரி மாதத்தில் ராஜ்யசபாவில் சீட்டு கிடைத்திருந்தது. அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து நான் அவரோடு இன்னொரு படத்தில் நடித்தேன். அப்போது அவர் என்னிடம் நீ சொன்ன மாதிரியே நடந்துட்டு பா... எல்லாரும் என்னை வந்து பார்க்க வந்தாங்க. நீ ஏன் வரல? என்று கேட்டார்.
நான் அதற்கு, நான் சொன்னது நடந்தால் நீங்கதானே என்னை பார்க்க வரணும் என்று சொன்னேன். அவர் சிரித்து விட்டார். அதுபோல சில நேரங்களில் என்னை காமெடியனே இங்க வா என்று கூப்பிடுவார். நான் போனால் ஏதாவது காமெடி சொல்லு என்பார். நான் அதற்கு காமெடி எல்லாம் சும்மா சொல்ல முடியாது காசு வாங்கிட்டு தான் நான் சொல்லுவேன் என்று சொல்லுவேன். அதற்கு தன்னுடைய அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு இவனுக்கு எட்டணா கொடு என்று சொல்லுவார்.
அதற்கு நான் எட்டணா கொடுத்தா அதுக்கு தகுந்த மாதிரி தான் காமெடி சொல்லுவேன் அது ஓகேவா என்று கேட்க அவர் சிரித்து விடுவார் என்று நடிகர் சிவாஜி கணேசன் குறித்து வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருந்தார். அதுபோல நடிகை மனோரமா குறித்தும் அந்த பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருந்தார். அதில் மனோரமா போல ஒருத்தங்களை நான் பார்த்ததே கிடையாது. அவங்க ரொம்ப பாசமானவங்க.
நான் அவங்க கூட நிறைய முறை வேலை பார்த்து இருக்கேன் என்னை எல்லா இடங்களிலும் தம்பி என்று தான் கூப்பிடுவார். ஒருமுறை நான் சூட்டிங் ஸ்பாட்டில் போய் இருந்தபோது அவங்க இருந்ததை கவனிக்கல... எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போ என்னை கூப்பிட்ட மனோரமா நீ என்னை மட்டும் ஒதுக்கி வச்சுட்டியா? அப்போ என்னை பத்தி ஏதோ உனக்கு கோபம் இருக்கு.. அதனால தான் நீ என்கிட்ட பேசல.
நீ என்னைக்குமே என்னுடைய தம்பி தான். நீ என்னிடம் பேசலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கும்போது கண்கலங்கி விட்டார். அவர் அழுவதை பார்த்து நான் பதறிப் போய் விட்டேன். அதுபோல அவர் நடிப்பிலும் ரொம்பவே கெட்டிக்காரர். அவர் நடித்த காட்சிகள் அவருக்கு பிடிக்கும் வரை இயக்குனரிடம் இன்னொரு முறை நான் நடிக்கவா என்று கெஞ்சி கொண்டிருப்பார்.
நம்மிடம் யாராவது ஒரு காட்சி நடித்தது போதும் என்று சொன்னால் விட்டுவிடுவோம். ஆனால் மனோரமா அவருக்கு திருப்தி ஆகுற வரைக்கும் அதே காட்சியில் மூன்று முறை நான்கு முறை கூட நடித்து சரி பண்ணுவார் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











