நான் இருக்கேன் கவலைப்படாத.. கையை பிடித்த ராம்கி.. நிரோஷாவுக்கு பற்றிக்கொண்ட காதல் தீ!
சென்னை: நடிகை நிரோஷா கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதும் படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார் நிரோஷா. விஜய் டிவியில் இவர் நடித்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இவரது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிரோஷா, ராம்கி உடனான தன்னுடைய காதல் கதை குறித்து பேசியுள்ளார். பிரியங்கா தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சி தற்போது 5வது சீசனாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை நிரோஷா: நடிகை நிரோஷா சிறப்பான சினிமா பின்புலத்திலிருந்து சினிமாவில் நடிக்க வந்தவர். இவருடைய அப்பா, அக்கா, அண்ணன்கள் என அனைவரும் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்ட நிரோஷா, தற்போதும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார். சில படங்களிலும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நிரோஷா. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இவரது கேரக்டர் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அம்மாவாக பாண்டியனின் மனைவியாக சிறப்பாக நடித்து வருகிறார் நிரோஷா. இப்படி ஒரு மாமியார் நமக்கெல்லாம் வேண்டும் என்பதாக இளம் பெண்களின் விருப்பத்திற்குரிய மாமியாராக மாறியுள்ளார். கடந்த 90களின் காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோதே உடன் நடித்த நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நிரோஷா. இந்நிலையில் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரோஷா, நடிகர் ராம்கி உடனான தன்னுடைய காதல் கதை குறித்து பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஸ்டார்ட் மியூசிக் 5 ஷோ: முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை நளினி மற்றும் மற்ற நடிகர்கள், ராம்கி குறித்த தங்களது பெருமிதத்தை பகிர்ந்துக் கொண்டனர். ராம்கியின் கேரக்டர் சிறப்பு குறித்தும் அவர்கள் பேசினர். சூட்டிங்கின்போது தன்னுடைய தட்டில் என்ன உணவு இருக்கிறதோ, அது தன்னுடைய அசிஸ்டெண்ட் முதல் அங்கு வேலை செய்யும் அனைவர் தட்டிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ராம்கி என்று அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவர் சூட்டிங்கின்போது தன்னுடைய வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவருவார் என்று நடிகை நளினியும் குறிப்பிட்டுள்ளார்.
நிரோஷா -ராம்கி காதல் கதை: இதனிடையே தன்னுடைய காதல் கதை குறித்து பேசிய நிரோஷா, தான் ராம்கியுடன் நடித்த செந்தூரப்பூவே படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக நீந்தி செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாகவும் அப்போது தன்னுடன் நடித்த நடிகை ஒருவர் பயத்தில் தன்னையும் உள்ளே இழுத்து விட்டதாகவும் தனக்கு நீச்சல் தெரிந்த நிலையிலும் தன்னால் மேலே வர முடியாத நிலையில் தன்னுடைய அண்ணன் இதை கண்டுபிடித்து தண்ணீருக்குள் வந்து அந்தப் பெண்ணிடமிருந்து தன்னையும் அந்தப் பெண்ணையும் காப்பாற்றி கரை சேர்த்ததாகவும் கூறியுள்ளார். இது தான் சந்தித்த மிகப்பெரிய விபத்து என்றும் கூறியுள்ளார்.
வெட்கப்பட்ட நிரோஷா: இதையடுத்து உயிர்ப்பிழைத்து மேலே வந்த தன்னை கையைப் பிடித்து ராம்கி பேசியதாக நிரோஷா தெரிவித்துள்ளார். மயக்கமாக இருந்த தன்னிடம், கையை பிடித்து நான் இருக்கிறேன் என்று ராம்கி கூறிய நிலையில், அந்த தருணத்தில் தான் தனக்கு ராம்கி மீது காதல் பற்றி கொண்டதாகவும் நிரோஷா கூறியுள்ளார். இவர்களது காதல் கதையை கேட்ட சக நடிகர்கள் நிகழ்ச்சியிலேயே நிரோஷாவை கலாய்த்த நிலையில் அவர் வெட்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











