தேசத்தின் பெருமை சொல்லும் ‘யே மேரா இந்தியா’!

ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 66 வது சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட பாடலில் இமயம் தொடங்கி குமரி வரை வனவளமும், விலங்குகளின் உயிரோட்டமான வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
மயில்களின் ஆட்டம், மான்களின் துள்ளல், சுந்தரவன காடுகளின் எழில் என ஒரு புதிய அனுபவத்தைத் தரும் படப்பிடிப்பு. இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிரம்பி வழியும் வளங்களை இந்த நிகழ்ச்சி நம் வீட்டுக்குள் கொண்டுவருகிறது. இந்த பாடல் 3 நிமிடம் ஒளிபரப்பாகிறது. இந்தி, தமிழ், பெங்காலி கலந்து மூன்று மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழ் பகுதியை பிரபல பாடகி மாதங்கி பாடியுள்ளார்.
"வன விலங்குகளின் மீது இயற்கையின் மீதும் அதிக ஆர்வம் உண்டு. எனவே தான் இந்த பாடலை அதிக ஆர்வத்துடன் பாடினேன்," என்கிறார் மாதங்கி.
இந்த முன்னோட்ட பாடலைக் காணும்போதே இந்த நிகழ்ச்சியை முழுதாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் அளவுக்கு நாட்டின் காமிரா படாத பல இடங்களில் உள்ள அரிய வனவிலங்குகள், அவைகளின் வாழ்க்கைச்சூழலைப் பற்றி படம்பிடித்துள்ளனர்.
இந்திய வனப்பகுதிகளில் வசிக்கும் காண்டாமிருகம், புலி, மயில் என ஒவ்வொரு விலங்கிற்கும், பறவைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இந்த நிகழ்ச்சியில் அது தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தினசரி இரவு 8 மணிக்கு அனிமல் பிளானட் நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உண்மையிலேயே 'யே மேரா இந்தியா' என பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும்!


Click it and Unblock the Notifications











