மேக்கப் ரூமில் படித்து 10ம் வகுப்பு தேர்வில் 93% மதிப்பெண் வாங்கிய நடிகை
மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகை அஷ்னூர் கவுர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அஷ்னூர் கவுர். அவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் அவர் 93 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது குறித்து அஷ்னூர் கூறியதாவது,
நான் 90 சதவீத மதிப்பெண்களை எதிர்பார்த்த நிலையில் 93 சதவீதம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேர்வு முடிவை நினைத்து பதட்டமாக இருந்தேன். ஆனால் முடிவுகள் வெளியானதை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்.
நான் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து என் அம்மாவுக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. ரிசல்ட் வந்ததில் இருந்து செட்டில் உள்ள அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

குழந்தை நட்சத்திரங்கள் நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற கருத்தை மாற்ற நினைத்தேன். மேக்கப் ரூமில் படித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து படித்துவிட்டு செட்டுக்கு சென்று நடிப்பேன். ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையேயும் படித்தேன். தேர்வு நெருங்கியபோது கூட நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
12 மணிநேர ஷூட்டிங் முடிந்து காரில் வீடு திரும்பும்போது படித்தேன், வீட்டிற்கு சென்ற பிறகு இரவு 1.30 சிலநேரம் 2.30 மணி வரை படித்தேன். பிறகு காலை 5.30 மணிக்கு எல்லாம் எழுந்து படித்தேன் என்றார் அஷ்னூர்.


Click it and Unblock the Notifications











