300 எபிசோட்களை கடந்த பாக்யலட்சுமி சீரியல் ... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை : தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது விஜய் டிவி சீரியல்கள் தான். அதிலும் விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி போன்ற சீரியல்கள் அதிகமானவர்களின் மனம் கவர்ந்த சீரியல்களாக உள்ளன.

இவற்றில் பாக்யலட்சுமி சீரியல் பெண்களின், குறிப்பான குடும்ப தலைவிகளின் ஃபேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. சாதிக்க துடிக்கும் குடும்ப தலைவிகளை ஊக்கப்படுத்துவதாகவும், தங்களின் கனவுகளை அடைய அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை காட்டுவதாகவும் உள்ளதால் பெண்களின் ஆதரவை பெற்ற சீரியலாக இது உள்ளது.
கணவர் கோபியால் உதாசீனபடுத்தப்படும் குடும்ப தலைவியான பாக்யலட்சுமிக்கு உலகமே குடும்பம் தான். இருந்தாலும் சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என நினைத்து, அதற்காக குடும்பத்தினரின் எதிர்ப்பு, போராட்டங்களை கடந்து, இளைய மகன் எழிலின் உதவியுடன் மசாலா கம்பெனி ஒன்றை துவங்குகிறார்.
பிறகு அதை மேலும் டெவலப் செய்ய வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் தொழிலையும் துவங்குகிறார். அதற்குள் டூவீலரில் இருந்து கீழே விழுந்து, காலை உடைத்துக் கொள்கிறார். இருந்தாலும் அவளின் வலியை யாரும் புரிந்து கொள்ளாமல் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என வறுத்தெடுக்கிறார் மாமியார்.
குடும்ப தலைவிகள் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்வதில்லை என்பதை நச்சென அனைவரின் மனதையும் தைக்கும் விதமாக எடுத்து காட்டி உள்ளார் டைரக்டர்.
இது ஒருபுறம் என்றால் மனைவி பாக்யாவை ஏமாற்றி, தோழி ராதிகாவிற்கு ஆறுதல் கூறுவதை போல் அவளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் கோபி. கோபியை பலமுறை கையும் களவுமாக பிடித்தும் அம்மா பாக்யாவின் சந்தோஷத்திற்காக அப்பா பற்றிய உண்மையை யாரிடமும் சொல்லாமல் மவுனம் காக்கிறார் எழில். கோபி - ராதிகா இடையேயான ரகசிய உறவை அம்பலப்படுத்த அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கிறார் ராதிகாவின் கணவர் ராஜேஷ்.
இப்படி பலவிதமாக உணர்ச்சி குவியல், திருப்பங்கள், சுவாரஸ்யங்கள் என போய் கொண்டிருக்கிறது பாக்யலட்சுமி சீரியல். இந்நிலையில் இந்த சீரியல் 300 எபிசோட்களை எட்டி உள்ளது. இதனை பாக்யலட்சுமி டீம் ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர்.
ஷுட்டிங் செட்டில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை வெளியிட்டு, 300 எபிசோட்களை எட்டி விட்டதாக அறிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பாக்யலட்சுமி டீமுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











