டிவியில் புதுமை செய்யப் போகும் பாரதிராஜா... சீரியலுக்கு கேசட் ரிலீஸ்
இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா தற்போது சின்னத்திரையில் மீண்டும் புதிய சீரியலை இயக்க வருகிறார். சினிமாவைப் போல அந்த சீரியலுக்கும் 7 பாடல்களை உருவாக்கி அதற்கான கேசட் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.
சினிமாவில் பிசியாக இருப்பவர்கள் சின்னத்திரைக்கு வர யோசிப்பார்கள். இயக்குநர் பாரதிராஜா இப்போதுதான் அன்னக் கொடியும், கொடி வீரனும் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அந்த படத்தை முடித்த உடனே சீரியலுக்கும் தயாராகிவிட்டார். இதுவரை இல்லாதவகையில் சினிமாவைப் போலவே தனது புதிய சீரியலை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

தொலைக்காட்சி சீரியல்கள்
தொலைக்காட்சியில் ஏற்கனவே தெற்கத்திப் பொண்ணு, அப்பனும் ஆத்தாளும் என்ற இரண்டு தொடர்களை இயக்கியுள்ளார் பாரதிராஜா. இரண்டுமே ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது. இப்போது புதியதாக முதல் மரியாதை என்ற சீரியலை இயக்கப் போகிறார். இது குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம்.

பாடல்கள் ரிலீஸ்
இந்த தொடருக்காக கிழக்குச்சீமையிலே படம் போன்று 7 பாடல்களையும் உருவாக்கியுள்ளாராம் பாரதிராஜா. அதோடு நில்லாமல் அந்த பாடல்களை ஆடியோ விழா நடத்தி சினிமா பாணியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். இந்த புதுமை சின்னத்திரை வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

முதல் மரியாதை கூட்டணி
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றி பெற்ற படம். தேசிய விருது பெற்றது. இதில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையக்கிளப்பியது. அந்த அளவுக்கு பாரதிராஜா- இளையராஜா-வைரமுத்து கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருந்தது.

டைட்டில் பாடல்
புதிய தொடருக்கு ஒரு டைட்டில் பாடலை இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர். இதை கேட்டுவிட்டு பாராட்டிய பாரதிராஜா, நீதான் என் அடுத்த படத்துக்கு இசை என்று கூறியுள்ளார். அனைத்து பாடல்களையும் இசையமைத்து முடித்த உடன் விரைவில் கேசட் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











