சரவணன் வெளியேறிய விவகாரம்.. அப்பட்டமாக பொய் சொன்ன பிக் பாஸ்.. எதிர்த்துக் கேள்வி கேட்ட சேரன்!
சரவணன் பிக் பாஸில் இருந்து வெளியேறி விட்டதாக, சகபோட்டியாளர்களிடன் பிக் பாஸ் பொய் கூறியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது எதனால் என்ற குழப்பம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் பொய் கூறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கல்லூரி காலத்தில் பேருந்தில் செல்லும் போது, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வேன் என சரவணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போதும், பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார் சரவணன்.
கன்பெக்சன் ரூமுக்குப் போன சரவணன் நீண்ட நேரமாகத் திரும்பி வராததால், போட்டியாளர்கள் குழப்பமடைந்தனர்.

சரவணன் வெளியேற்றம்:
பின்னர் அனைவரையும் லிவ்விங் ஏரியாவிற்கு அழைத்த பிக் பாஸ், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக' அறிவித்தார். இதைக் கேட்டு போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சாண்டி, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் கதறி அழ ஆரம்பித்து விட்டனர்.

போட்டியாளர்கள் குழப்பம்:
சரவணன் குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டதா என்ற குழப்பமும், பயமுமே அவர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. சாண்டி ஒரு படி மேலே போய், சரவணனின் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என பரிதவித்தார். வழக்கம் போல், பாத்ரூமுக்குள் சென்று கவினும், சாண்டியும் கதறி அழுதனர்.

சேரன் நிதானம்:
சரவணன் வெளியேறியதால் அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நிதானமாகச் செயல்பட்டனர் சேரனும், முகெனும். நேராக ஒரு கேமராவிற்கு முன் சென்று, ‘சரவணன் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார் எனக் கூறுங்கள். அனைவரும் பயத்தில் இருக்கிறோம்' என கோரிக்கை வைத்தார்.

சமாதானம்:
பெரும்பாலான போட்டியாளர்களைக் கதற வைத்த பிக் பாஸ், மீண்டும் அனைவரையும் அழைத்து சரவணனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. சில தவிர்க்க இயலாத காரணத்தால் தான் பிக் பாஸில் இருந்து வெளியேறி இருக்கிறார். மீதி காரணத்தை சனிக்கிழமையன்று தெரிந்து கொள்வீர்கள்' என அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் கொஞ்சம் சமாதானம் அடைந்தனர்.

பொய் சொன்ன பிக் பாஸ்:
ஆனால், போட்டியாளர்களிடம் பிக் பாஸ் அப்பட்டமாக பொய் கூறியது வெளிப்படையாகவே தெரிந்தது. ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக பேசி கொண்டிருந்தவரை, திடீரென கன்பெக்சன் ரூமுக்கு அழைத்து, அவரை கண்களைக் கட்டி, வீட்டில் இருந்து வெளியேற்றியது பிக் பாஸ் தான். ஆனால், மற்ற போட்டியாளர்களிடம் கூறுகையில், ‘அவர் வெளியேறிவிட்டார்' எனக் கூறினார்.

அவமானம்:
இதனால் பிக் பாஸ் பொய் ஆட்டம் ஆடுகிறார் என்பது தெரிய வந்துள்ளதாக நெட்டிசன்கள் பிக் பாஸைக் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அநியாயமாக சரவணனை அவமானப்படுத்தி இப்படி வெளியே அனுப்பி விட்டீர்களே என அவர்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். சனிக்கிழமை கமல் வந்து என்ன காரணம் எனச் சொன்ன பிறகு தான் போட்டியாளர்கள் மத்தியில் உள்ள குழப்பம் தீரும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











