Bigg Boss 8: பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன்?.. பரிசு இத்தனை லட்சமா?.. குவியும் வாழ்த்து
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நடந்துவந்த சூழலில் நாளையுடன் அது முடிவடையப்போகிறது. மொத்தம் 24 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள். விறுவிறுப்பாக நடந்த இந்த சீசனில் யார் இறுதிப்போட்டியில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்தது. இந்தச் சூழலில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவிவருகிறது. அதில் முத்துக்குமரன் கப்பை தட்டி சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை நடந்து முடிந்திருந்த ஏழு சீசன்களுக்குமே தமிழ்நாட்டில் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதேபோல் எட்டாவது சீசனுக்கும் கண்டிப்பாக வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அறிவிப்பு வந்ததிலிருந்தே நிச்சயம் இந்த சீசனும் ஹிட்டடிக்கும் என்கிற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. அதன்படியே நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது நிகழ்ச்சி.

போட்டியாளர்கள்: இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் (வைல்டு கார்டு போட்டியாளர்களையும் சேர்த்து). இவர்களில் பெரும்பாலானோர் பெரிய பிரபல்யம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அவர்களுக்கு பெரிய பிரபல்யம் இல்லாவிட்டாலும் போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்தே தங்களது சிறந்த பங்களிப்பை போட்டியில் செலுத்தி ஒவ்வொருவரும் தனித்தே தெரிந்தார்கள். இதன் காரணமாக நிகழ்ச்சியை காண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
செம ட்விஸ்ட்: பிக்பாஸ் 8ல் ஏகப்பட்ட ரூல்ஸ்கள் மாறியிருந்தன. அவற்றில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது பண பெட்டி விவகாரம்தான். முன்பெல்லாம் பண பெட்டியை எடுத்துக்கொண்டால் அந்தப் பணத்தோடு வீட்டை விட்டு சென்றுவிடலாம். ஆனால் இந்த முறையோ பண பெட்டியை குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டால் மீண்டும் போட்டியில் தொடரலாம் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது. இந்த ட்விஸ்ட்டில் சிக்கி ஜாக்குலின் பரிதாபமாக பண பெட்டியும் இல்லாமல் போட்டியில் இடமுமில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறினார்.
டாப் 5 போட்டியாளர்கள்: ஜாக்குலின் வெளியேற்றத்தை தொடர்ந்து போட்டியில், முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா, பவித்ரா உள்ளிட்டோர் டாப் 5 போட்டியாளர்களாக இறுதிக்கட்டத்துக்கு முன்னேறினார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னராக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
யார் வின்னர்?: அதன்படி பிக்பாஸ் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வந்திருக்கிறார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசனில் மக்களின் மனதை அதிகம் கவர்ந்தவர்களில் முத்துக்குமரன் டாப்பில் இருந்தார். அவரது பேச்சு, செயல்பாடுகள் அனைத்துமே வெகுவாக மக்களை ஈர்த்தன. அவரது விளையாட்டை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் ரொம்பவே பக்குவமாக நடந்துகொள்கிறார் என்றும் புகழ்ந்துவந்தார்கள். அதேபோல் ஒருமுறை அவர் பட்ட கஷ்டத்தை சொல்லும்போது பலரும் கலங்கினார்கள்.
பரிசு இத்தனை லட்சமா?: இதன் காரணமாக முத்துக்குமரன்தான் இந்த சீசனின் வின்னராக வருவார் என பலரும் ஆரூடம் கூறினார்கள். இப்போதைய தகவல்கள்படி அந்த ஆரூடம் பலித்துவிட்டதாகவே கூறப்படுகிறது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு பரிசு தொகையாக 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பண பெட்டி டாஸ்க்கில் அவர் எடுத்த 50,000 ரூபாயும் என மொத்தம் 41 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். முன்னதாக பண பெட்டி டாஸ்க்கில் விஷால் 5 லட்சம் ரூபாயும், ரயான் மற்றும் பவித்ரா ஆகியோர் தலா 2 லட்சம் ரூபாயும் எடுத்தார்கள். இந்த தொகை மொத்த பரிசு தொகையிலிருந்து கழிக்கப்படுவதால் முத்துக்குமரனுக்கு 40 லட்சத்து 50,000 ரூபாய் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











