பிக்பாஸ் மேடை டூ ராமநாதபுரம்: சொந்த மண்ணில் திவ்யா கணேசனுக்கு உற்சாக வரவேற்பு.. இன்ஸ்டா வீடியோ வைரல்
சென்னை: விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9, விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் நிறைவடைந்தது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசன், பின்னர் 4 வைல்ட் கார்டு என்ட்ரிகளின் வருகையால் பரபரப்பின் உச்சத்தை எட்டியது. ஒரு 'வைல்ட் கார்டு' என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்தப் போட்டியையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகை திவ்யா கணேஷ். தற்போது அவர் பிக்பாஸ் பட்டத்தை வென்ற கையோடு, தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்குச் சென்றபோது அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு பற்றி சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆட்டத்தை மாற்றிய வைல்ட் கார்டு என்ட்ரி: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9, ஆரம்பத்திலிருந்தே சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தது. 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், பாதியிலேயே நுழைந்த 4 வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவர்தான் திவ்யா. வழக்கமாகத் தொடக்கத்தில் வருபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்பட்ட விதியை உடைத்தார் திவ்யா. இறுதிப் போட்டியில் கானா வினோத் 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நேர்மையான ஆட்டம், எதற்கும் அஞ்சாத குணம், "பிடித்தால் பேசுவேன்.. பிடிக்காவிட்டால் ஒதுங்குவேன்" என்கிற பிடிவாதம் எனத் திவ்யா தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மகுடம் சூடினார்.

சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு: வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, திவ்யா தனது வேர்களைத் தேடிச் சென்றுள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற அவருக்கு, அங்குள்ள மக்கள் கொடுத்த வரவேற்பு ஒரு தேவதையைப் பார்ப்பது போல் இருந்தது. கிராமத்தின் எல்லைக்கே சென்று மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் மற்றும் ஆரத்தியுடன் அவரை மக்கள் வரவேற்றனர். தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் வெறும் 'செலிபிரிட்டி'யாக அல்லாமல், தங்கள் ஊரின் மகளாகவே மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவு அருந்தியது பலரையும் நெகிழ வைத்தது. தாரை தப்பட்டை முழங்க அவர் ஊருக்குள் அழைத்து வரப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் செம வைரல்.
நெஞ்சை உருக்கும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு: இந்த உற்சாக வரவேற்பு குறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவையும், பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளுக்கு முன்னால், ராமநாதபுரத்திலிருந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே தனது சூட்கேஸில் சுமந்துகொண்டு சென்னைக்கு வந்த ஒரு பெண் இவள். என்ன நடக்கும், எப்படி வாழ்வோம் என்று எதுவும் தெரியாது.. ஆனால், எதற்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்கிற ஒரு தாகம் மட்டும் அவளுக்குள் இருந்தது. இன்று, எதற்காக இத்தனை ஆண்டுகள் பிரார்த்தனை செய்தேனோ, அந்த அங்கீகாரம், அந்த அன்பு என அனைத்தையும் கையில் ஏந்தியபடி உங்கள் முன் நிற்கிறேன்." மேலும், "நான் நானாகவே இருந்ததற்காக எனக்குக் கிடைத்த அன்பு இது. என் பெற்றோரைப் பெருமைப்படுத்திவிட்டேன் என்ற மனநிறைவோடு, இந்தப் பயணத்தில் என்னோடு நின்ற அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், கிராம மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அன்பு பாராட்டுவதும், திவ்யா மகிழ்ச்சியில் கண்கலங்குவதும் பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது. ராமநாதபுரம் மண்ணிலிருந்து கிளம்பிய ஒரு கனவு, இன்று தமிழகம் முழுக்கத் தேடப்படும் ஒரு வெற்றியாக மாறியுள்ளது. திவ்யா கணேஷின் இந்த வெற்றி, "உண்மையாக இருந்தால் உலகம் உன்னை அங்கீகரிக்கும்" என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











