சொம்பு நீங்கதான்னு சொன்ன விஜய் சேதுபதி.. அப்போ நான் மனசுக்குள்ள நினைச்சது இதுதான்.. BB அருண் ஓபன்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக முடிந்து விட்டது. 24 போட்டியாளர்கள் களமிறங்கி, அதில் முத்துக்குமரன் வெற்றி பெற்றார். அவருக்கு டைட்டில் கோப்பையும், ரூபாய் 40.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன் இந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவரான அருண் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் அருண். இவர் பிக் பாஸ் சீசன் 8இல் போட்டியாளராக களமிறங்கினார். மொத்தம் 15 வாரங்கள் நடைபெற்ற போட்டியில் 14 வாரங்கள் வீட்டிற்குள் இருந்தார். மிகவும் சிறப்பான போட்டியாளரான இவர், கடந்த சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலன். ஃபேமிலி மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வரும் வாரத்தில் அருணைச் சந்திக்க அர்ச்சனா வந்தார்.

அருண் தொடக்கத்தில் சில வாரங்கள் மிகவும் அமைதியாக இருந்தார். எப்போது, வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்தார்களோ, அதன் பின்னர் அருணின் ஆட்டம் மொத்தமாக மாறியது. அதாவது முதல் கியரில் இருந்து உடனே ஆட்டத்தை டாப் கியருக்கு மாற்றினார். கிட்டத்தட்ட 12வது வாரம் வரை பையர் மோடில் இருந்த அருண், அதன் பின்னர் கொஞ்சம் டவுன் ஆனார். இதுவே அவரது எலிமினேஷனுக்கு ஒரு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அருண்: இப்படியான நிலையில் அவர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, “ பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கல்லூரியைப் போல். நாங்கள் அனைவரும் அங்கு அப்படிதான் இருந்தோம். எங்களுக்குள் சண்டை இருந்தது, ஒற்றுமை இருந்தது. மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். நான் 14வது வாரம் வெளியே வந்தேன். அப்போதே நான் கேட்டேன், உள்ளே மீண்டும் போவேனா என. பிக் பாஸ் தரப்பில் தெரியவில்லை, எதற்கும் தயாராக இருங்கள் எனக் கூறினார்கள். ஆனால் அதற்குள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால்தான் போகமுடியவில்லை.
சொம்பு தூக்கி: நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்களில், வீக் எண்டில் விஜய் சேதுபதி சக போட்டியாளர்களுக்கு பட்டம் கொடுப்பது குறித்து பேசினார். அப்போது அருண் சொம்பு தூக்கி எனும் பட்டத்தை யாருக்குத் தருவது எனத் தெரியவில்லை எனக் கூறினார். இதனால், உடனே விஜய்சேதுபதி, அதனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும் விஜய் சேதுபதி அப்படிக் கூறியதும், அருணின் முகமும் மாறியது.
மனதில்: இது தொடர்பான கேள்விக்கு அருண் அளித்துள்ள பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, ”நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், எனது மனதில் நினைத்துக் கொண்டது, எது நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான். அதாவது மகிழ்ச்சி நடந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும், துயரம் நடந்தாலும் சவால் வந்தாலும் என, எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன். விஜய் சேதுபதி சார் என்னை அப்படிச் சொல்லும்போது கூட எனது மனதில் அதுதான் தோன்றியது” என பதில் அளித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











