Bigg Boss 8: ஜெயிச்சுட்ட குமரா.. இன்னைக்கு தமிழ்நாட்டுல நீ தான் சூப்பர் ஸ்டார்.. குவியும் வாழ்த்து!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்றுடன் அதாவது, ஜனவரி 19ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. விஜய் சேதுபதி முதன் முதலாக தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தது. ஆனாலும், இந்த சீசன் தனது இறுதி நாட்களை நெருங்க நெருங்க, மக்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக மாறிவிட்டது. இப்படியான நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துக்குமரனின் ஆட்டம் குறித்து இந்தத் தொகுப்பில் குட்டி ரீவைண்டிங்காக பார்க்கலாம்.
பேச்சாளர் மற்றும் ஊடகவியலாளராக இருக்கும் முத்துக்குமரன், இந்த சீசனில் தான் களமிறங்கும்போதே, 106 நாட்களும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார். இந்த ஆட்டத்தின் பாதியிலேயே, டைட்டில் வின்னர் ஆவதற்கான தகுதி தனக்கு இருப்பதாக மக்களிடம் நிரூபித்துவிட்டார். இதனை உணர்ந்த சக போட்டியாளர்கள், அதுவரை முத்துவை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் முத்துக்குமரனை நாமினேட் செய்யவில்லை. ஆனாலும், தனது கடைசி நாள் வரை ஒட்டுமொத்த உழைப்பையும் செலுத்தி, டைட்டிலை தனதாக்கியுள்ளார்.

பேச்சாளர் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு, வார்த்தைகளை ஏதுவாகப் பேசி அந்தச் சூழலை தனக்கு சாதகமாக மாற்றிவிட்டார், என சக போட்டியாளர்கள் ஒரு குற்றச்சாட்டாக கூறினாலும், முத்து அதைத்தான் பெரும்பாலான நேரங்களில் செய்துள்ளார். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்ல, வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது, அதைக் கடந்து, நிதானம், சூழலைக் கையாளும் திறன், ஆட்டத்தின் போக்கையே மாற்றும் அளவுக்கான ஆளுமை, சரியும் இடத்தில் தேங்காமல் இருப்பது, தனது சரிவுக்கான காரணத்தை கண்டு அதனை சரி செய்வது என எல்லா இடங்களிலும் முத்துக்குமரன் சென்டம் அடித்துள்ளார்.
முத்துக்குமரன்: தமிழ் மொழிதான் எனது Stagey , தமிழ் சொல்லிக் கொடுத்த அறம் தான் எனது Stagey எனக் கூறிய முத்துக்குமரன், தனது Stagey-க்கு எவ்வளவு நியாயமாக இருக்கவேண்டுமோ, அவ்வளவு நியாயமாக இருந்துள்ளார். நக்கலும் நையாண்டித்தனமும் கலந்த அவரது பேச்சு, இந்த சீசனை மக்கள் மத்தியில் ஒரு திருப்திகரமான சீசனாக மாற்றியுள்ளது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில், கோபத்தை வெளிப்படுத்தி, போட்டியாளர்களுக்கு நியாயத்தைப் புரியவைத்துள்ளார். பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தால், பிக் பாஸ்க்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சில இடங்களில் விளையாடியுள்ளார், அதற்காக சில கொட்டுகளும் சில Good-களும் வாங்கியுள்ளார்.

வாழ்த்து: சில இடங்களில் முத்துக்குமரனின் ஆட்டம், பார்வையாளர்களுக்கு அதிருப்தியும், கோபத்தையும் கூட ஏற்படுத்தியது. அவருக்காக நிகழ்ச்சியைப் பார்த்து வந்த, ரசிகர்களுக்கே, அவரின் ஆட்டம் சில நேரங்களில் பிடிக்கவில்லை. அவற்றை விஜய் சேதுபதி சுட்டிக் காட்டிய பின்னர், அவற்றைச் சரி செய்து கொண்டுள்ளார். இன்றைக்கு பல கோடி நெஞ்சங்களின் அன்பைப் பெற்று, டைட்டிலை ஏந்தப்போகும் முத்துக்குமரனுக்கு ரசிகர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முத்துக்குமரனின் வெற்றியை தனது வெற்றியைப் போல் கொண்டாடும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.

சூப்பர் ஸ்டார்: சிலரோ, நாம ஜெயிச்சுட்டோம் குமரா, அம்மா புள்ள சார் அவன்... அவன் ஜெயிக்காம வேற யாரு ஜெயிப்பா? , இன்னைக்கு தேதிக்கு தமிழ்நாட்டுல குமரன் தான் சூப்பர் ஸ்டார், இந்த டைட்டிலுக்கு முத்துக்குமரன் 100 சதவீதம் தகுதியானவன் என பல வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். டைட்டிலை வென்ற முத்துக்குமரன், பிக் பாஸ் கோப்பையுடன், ரூபாய் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார். இது இல்லாமல், பணப்பெட்டி டாஸ்க்கில் அவர் ரூபாய் 50 ஆயிரத்தைக் கைப்பற்றினார். இதனால், அவருக்கு மொத்த பரிசுத் தொகை ரூபாய் 41 லட்சங்கள். வாழ்த்துகள் குமரா!


Click it and Unblock the Notifications











