‘ஏ’ சான்றிதழ் திரைப்படங்கள் இனி 11 மணிக்கு மேல் தான் டிவியில் ஒளிபரப்பாகும்?!
டெல்லி: இந்திய தணிக்கைத்துறை சார்பில் 'ஏ' சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படங்களை மிக குறைந்த அளவில் காட்சிகளை நீக்கிவிட்டு இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கேபிள் டி வி சட்டப்படி "ஏ' சான்று அளிக்கப்பட்ட சினிமா படங்களை டி வியில் திரையிட முடியாது. அந்த படங்களை டிவியில் ஒளி பரப்ப வேண்டுமென்றால் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் "யு ஏ' சான்று அளிக்க வேண்டும்."யு ஏ' சான்று வேண்டுமென்றால் "ஏ' படங்களில் உள்ள ஆபாச காட்சிகள் அத்தனையையும் நீக்கப்பட வேண்டும்.
திரைப்படங்களுக்கு சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் லம்ப் ஆக ஒரு தொகையை பார்த்துவிடுகின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள். 'ஏ' சர்ட்டிபிகேட் படங்கள் என்றால் டிவியில் ஒளிபரப்ப முடியாது என்பதால்தான் அதிக அளவிலான வன்முறை, ஆபாச காட்சிகளை நீக்கிவிட்டு யு/ஏ சான்றிதழ் பெற்று டிவி ஒளிபரப்ப கொடுக்கின்றனர்.

காத்திருக்கும் திரைப்படங்கள்
இப்போது ஏராளமான படங்கள் "யு ஏ' தர சான்றுக்காக மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.அவற்றில் எந்தெந்த படங்களை டி வி யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து பி.சி.சி.ஐ., எனப்படும் செய்திகள் இல்லாத பிற டிவி நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.

சரியா புரியலையே
இப்படி "ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை "யு ஏ' சான்றுக்கு மாற்ற படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால் படத்தின் கதை சரிவர புரியாமல் பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. படத்தில் ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணியாகும். அதனால் படத்தில் உயிரோட்டமே இல்லாமல் போய் விடுகிறது கூறப்படுகிறது.

இரவு 11 மணிக்கு ஒளிபரப்பலாமே?
எனவே "ஏ' சான்று படங்களை நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல் டி விகளில் வெளியிட அனுமதிக்கலாம் என தணிக்கை வாரியத்திற்கும் பி.சி.சி.ஐ.,க்கும் பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

படங்களை பார்வையிட புதிய குழு
இனிமேல் "ஏ'சான்றிதழ் படங்களை நள்ளிரவில், தொலைக்காட்சிகளில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக சமூக ஆர்வலர்கள் திரைப்பட துறையினர் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி நள்ளிரவில் ‘ஏ’ படங்கள்
இந்த குழுவின் ஆலோசனைப் படி விரைவில் நள்ளிரவு 11:00 மணிக்கு தொலைக்காட்சிகளில்'ஏ' படங்கள், ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என 11 மணிவரை தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனி இது மாதிரியான படங்களை போட ஆரம்பித்தால் இரவு தூக்கத்தை தியாகம் செய்து விடுவார்களே என்பதுதான் அநேக இல்லத்தரசிகளின் கவலை.


Click it and Unblock the Notifications