Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மனங்களில் உள்ள சுவர்கள் எப்போது உடைக்கப்படும்? ‘ரௌத்திரம் பழகு’ எழுப்பிய கேள்வி
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொட்டானிபட்டியைச் சேர்ந்த தலித் பஞ்சாயத்துத் தலைவர் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர்கள் பலரும் இன்றைக்கு அச்சத்துடனே காலம் தள்ளிவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலித்துகள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தலைவர் இருக்கையில் கூட அவரை அமரவிடுவதில்லை. பஞ்சாயத்து அலுவலகத்தின் பக்கம் கூட தலைவர்களை வர விடாமல் செய்கின்ற கொடுமையும் நடக்கிறது. இதனை மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.புதியதலைமுறையின் 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி
உத்தபுரம் சுவரும் தலித் தலைவர்களும்
ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முகங்களில் விழிக்கவே கூசி சுவர் எழுப்பியவர்களும் இருக்கின்றனர். அந்த சுவர் உடைக்கப்பட்டு விட்டாலும் மனதளவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிராக எழுப்பிய சுவர் உடைக்கப்படாமல்தான் இருக்கிறது. அதனால்தான் இன்னமும் ஒரு தலித் தலைவராக வருவதை உயர்சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.
மிரட்டப்படும் தலைவர்கள்
ஈரோடு மாவட்டம் பசவப்பட்டியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் வள்ளி தெய்வானை பல்வேறு கொடுமைக்கு ஆளாகியுள்ளார். துணைத்தலைவரோ எழுத்தரோ தனக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்பது இவரது புகாராகும். மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 171 பஞ்சாயத்துகளின் தலித் தலைவர்கள் அனைவரும் தங்கள் மீதான பாகுபாடுகளை உண்மை என்று கூறி ஆய்வுப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர்.
கொடியேற்ற தடை
விழுப்புரம் மாவட்டம், சேந்தநாடு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அறிவுக்கரசுவை, கடந்த ஜனவரி 26, அன்று சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர். இதனை வாக்குமூலமாகவே கொடுத்துள்ளார் அந்த தலைவர்.
தலைமுறையாய் தொடரும் அவமானம்
திண்டுக்கல் மாவட்டம், புளியூர்நத்தம் பஞ்சாயத்து தலைவர் சண்முகம் என்பவரை இதுநாள்வரை நாற்காலியில் உட்காரவிடாமல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. இவரது தந்தை முருகேசன் 2006ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக இருந்தார். அவரும் இதேபோல் பல்வேறு வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
படுகொலைக்கு உள்ளான தலித் தலைவர்கள்
மேலவளவு தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலைத் தொடங்கி கடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திரு.ஜக்கன் அதே ஆண்டிலும், மருதங்கிணறு பஞ்சாயத்துத் தலைவர் திரு.சேர்வரான் மற்றும் திருவாரூர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் 2007ம் ஆண்டிலும் படுகொலை செய்யப்பட்டனர். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் பல போராட்டங்களுக்குப்பின்னர்தான் தேர்தலையே நடத்த முடிந்தது.
அரசியல் அதிகாரங்கள்
2011 தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலித்துகளுக்கு 26 சதவிகிதமும் 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது. இவையெல்லாம் சமூகநீதி அடிப்படையில் வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாகும். அதே நேரத்தில் அரசு எதனடிப்படையில் இத்தகைய அரசியல் அதிகாரங்களை தலித்துகளுக்கு வழங்கியிருக்கிறதோ அவற்றின் நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா? என்பதையும் ஆராய்வது சிவில் சமூகத்தின் முக்கிய கடமை என்றார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.
தலைவர்களுக்கு சிறப்பு அதிகாரம்
தலித் பஞ்சாயத்துத் தலைவர்களாக இருக்கக்கூடிய பெரும்பாலான பஞ்சாயத்துகளில் துணைத் தலைவரும் எழுத்தரும் உயர்சாதியினராக உள்ளனர். இதனால் தலித் தலைவர்களால் சுதந்திரமாக செயல்படமுடியாத அவதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆகவே ரிசர்வ் தொகுதிகளுக்கு மட்டும் தலித் தலைவர்களுக்கான தன்னிச்சை அதிகாரம் கூடுதலாக வழங்குவதற்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
காதலித்தால் ஊரை எரிப்பது நியாயமா?
பறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்தது தொடங்கி இன்றைக்கு தர்மபுரியில் வன்னிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் காதலித்து மணம் புரிந்தது வரை கலப்புத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அன்றைக்கு ஆரியமாலாவையும், காத்தவராயனையும் கட்டி வைத்து எரித்தனர் என்கிறது நாட்டுப்புற கதை. இன்றைக்கோ ஒரு காதலுக்காக ஊரையே எரித்த கொடுமை நடந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக அவரை வளரவிடாமல் செய்யவேண்டும் என்பதற்காகவே இது நிகழ்த்தப்பட்டது என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
மனத்தின் சுவரை உடைக்க வேண்டாமா?
சாதீய அவமானத்தை துடைத்தெறிய 50 ஆண்டு தொடர் போராட்டங்களுக்குப்பின்னர் மே 6ம் 2008ம் நாள் சரித்திர நிகழ்வாக அந்த சுவர் இடிக்கப்பட்டது. மதிற்சுவரை இடித்து சாதியத்தை தகர்த்தாலும் இடியாத மனச்சுவர் இன்றைக்கும் பலரின் மனதிற்குள் பல்லாயிரம் அடி உயரமாய் எழுந்து நிற்கத்தான் செய்கிறது.
சாதியத்திற்கு எதிரான கான்கிரீட் சுவரை உடைத்துவிட்டோம் மனங்களில் உள்ள மதிற்சுவர்களை எப்போது உடைக்கப்போகிறோம் என்ற கேள்வியை எழுப்பினார் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர்.